ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

English Meaning:
In Turiyatita State Jiva Becomes Siva

In this Turiyatita Jagrat State
The Lord of Dance with Jiva in union stands
When that union takes place
Maya vanishes away;
That very day Jiva attains Siva Form.
Tamil Meaning:
இங்குச் சொல்லிவாராநின்ற இந்தச் சாக்கிரமுதலிய அவத்தைகளில் துரியத்தை அடைந்த போதிலும் சிவன் அனைத்தும் கடந்த வெற்ற வெளியான அதீத நிலையில் இருப்பவன் ஆதலால், அவ்விடத்திலே உயிரைக் கூட இருப்பான். (துரியத்தில் வந்துகூட மாட்டான்.) அவன் உயிரைக் கூடினால்தான் உயிர்க்கு உலக உணர்வு மறையும். அப்பொழுது அது சிவ உணர்வு ஒன்றேயுடையதாய்ச் சிவமாகும். (எனவே `உயிர் அதீத நிலையை அடைதல் வேண்டும்` என்பதாம்.)
Special Remark:
அதிகாரம் `பராவத்தை` ஆதலின், பராவத்தையை `நின்ற இச் சாக்கிரம்` என்றார். சாக்கிர நீள் துரியம் - சாக்கிரத்தினின்று நீண்டுசெல்ல உளதாகின்றதுரியம். மன்றல் - அம்பலவன். அம்பலம் - வெற்ற வெளி. அது அனைத்தும் கடந்த அதீத நிலையைக் குறித்தது. `மாயை` என்பது காரிய ஆகுபெயராய் உலகத்தை உணர்த்தி, இருமடி யாகுபெயராய் உலக உணர்வை உணர்த்திற்று. கூடுதல், புணர்தல் முதலிய சொற்களாற் கூறாமல், `மணம்` என்னும் சொல்லாற் கூறினமையால், அது, தலைவன் தலைவியை ஈருடல் ஓருடலாக முயங்குதல் போல இரண்டறக் கலத்தலைக் குறித்தது. எனவே, `துரியம் முதலிய பிற நிலைகளில் சிவன் உயிரோடு, கேளிர், கிளைஞர் முதலியவரோடு தலைப்பெய்தல் போலத் தலைப்பெய்திருப் பானாயினும் இரண்டறக் கலத்தல் அதீதநிலையில்தான் என்றதாயிற்று.
``அவன் இவன் ஆனது அவன் அருளால் அன்றி,
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற``3
என்பர் ஆதலால், `உயிரை வந்து மணப்பவன் சிவனே` எனக் கூறினார். அன்றே - அப்பொழுதே.
இதனால், `சிவன் தன்னிலையில் நிற்பது சுத்த துரியாதீத நிலை` என்பது கூறும் முகத்தால், `அதனை ஆன்மா அடைதலே அது பேறு பெறும் நிலையாகும்` என்பது கூறப்பட்டது.