ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை

பதிகங்கள்

Photo

அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.

English Meaning:
When Jiva is Rid of Malas by Siva-Sakti

Transcending the organs five (external)
And the four (internal),
In the (union) within of five (states) avastas,
The Jiva slumbers;
Then does the wondrous Lord
Appearing with Sakti of slender Form
Rid the Jiva of its poisons (Malas),
Forever to rejoice.
Tamil Meaning:
வித்தியா தத்துவங்கட்கு முதற் காரணமாய் உள்ள அசுத்த மாயையைக் கடந்து சிவத்துவத்தை அடைந்தமையால் `வித்தியாதரர்கட்குத் தலைவன்` எனச் சொல்லுதற்குரியசாதகன், பிராசாதகலைகளில் ஒன்பதைக் கடத்தலால், சுத்த மாயாகாரியங் களையும் கடந்த ஒருநிலையைப் பெற்றுப் பத்தாம் கலையாகிய வியாபினி கலையில் நின்று, அருட் சத்தியை வஞ்சம் அற்ற நெஞ்சுடன் நாடுவானாயின் அஃது, ஒன்பது அடுக்குக்களுக்கு மேல் உள்ள பத்தாவது மாடியில், காலில் செம்பஞ்சு ஊட்டுதல் முதலிய ஒப்பனை களுடன் கட்டிலில் உறங்குகின்ற தலைவியைத் தலைவன் அடைந்து, அவளோடு இனிய சொற்களைக் கூறுவது போன்றதாகும்.
Special Remark:
இங்கு, மெல்லியலாளுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது அருட்சத்தியேயாகலின், `அஞ்சொடு நான்கும்` என்றது, பொதுப்பட `ஒன்பது` என்னும் பொருட்டாய்ப் பிராசாத கலைகளில் கீழுள்ள ஒன்பதைக் குறித்தது. ஆகவே, `அகம்` என்று பத்தாவதாகிய வியாபினிகலையாயிற்று.
`விஞ்சையர் வேந்தனும் அஞ்சொடு நான்கும் கடந்து, அகமே புக்கு, நஞ்சு அற நாடின்(அது) நயம் செய்யும் ஆறு` எனக் கூட்டிப் பொருள் கொள்க. `அது` என்பது தோன்றா எழுவாய். `பஞ்சு அணிகால் அத்தோடு துயில்கின்ற` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. அத் தோடு, `அதனோடு` என்பதன் மரூஉ. காலில் செம்பஞ்சுக் குழம்பூட்டுதல், ஏனை ஒப்பனைகளுக்கு உபலக்கணம். `செல்வர் இல்லத்து இளமகள் நலத்தை வேண்டினோன், பல மாடிகளைக் கடந்து மேல்மாடியில் சென்றவழியே அவனைத் தலைப்பெய்தல் கூடுவது போலச் சுத்த சிவனது அருட்சத்தியை அடைய வேண்டினோன் பிராசாத யோகத்தில் பல படிகளைக் கடந்து மேலே சென்றபொழுதே அந்தச் சத்தியை அடைதல் கூடும்` என்றபடி.
``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனே நில்``l
என்றார் திருவுந்தியார் ஆசிரியர். `அவள் கிடக்கும் இடம் பத்தாம் தானம்` என்பதை இம்மந்திரத்தால் அறிகின்றோம். பத்தாம் தானத்தைக் கடந்து நான்கு தானங்கள் அந்தரமாய் நிற்க. அப்பால் உள்ள இரண்டு தானங்கள் சிவன் இருக்கும் ஆத்தானம் ஆகும். இன்ப வழியாதல் பற்றி, `கிழவி` என்றும்` `மெல்லியலாள்` என்றும் சொல்லப் படினும், `தாயுடன் சென்றே பின் தாதையைக் கூடவேண்டும்`3 என்பது பற்றி, `சத்தியை முதற்கண் சார்தல் வேண்டும்` எனக் கூறினார்.
`சத்தி ஐந்துடன் - சத்தி பெறும் உயிர் தான் அங்குற்று ஆறுமே` என முன் மந்திரத்திற் கூறினார். அதனை ஞான நெறியாற் கூட இயலாபொழுது, பிராசாத யோக நெறியால் கூடுதல் கூடும்` என்பது இதனால் கூறப்பட்டது.