ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

English Meaning:
All Jivas Experience These States of Awareness

Contaminated by Primordial Mala (Impurities) Five,
Jivas, all, the Five States of Awareness experience;
Endless indeed are the bodies and organs
That Maya endows;
All Souls caught in birth and death,
Are by Karma alike struck.
Tamil Meaning:
முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலைபெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லாவகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.
Special Remark:
எனவே, `அவத்தை பேதங்கள் பெரும்பான்மை யாகச் சகலாவத்தையிலே நிகழ்வன` என்பதும், `அவற்றிற்குக் காரணம் வினையே` என்பதும் கூறியவாறாம். ஆகவே, `கேவல ஐந்தவத்தை என்பன` - சகலத்திற் கேவல அவத்தைகள் என்றும் சகல ஜந்தவத் தைகள் - என்பன, - `சகலத்திற் சகல ஐந்தவத்தைகள்` என்றும், `சுத்த ஐந்தவத்தைகள் - என்பன, - சகலத்தில் சுத்த ஐந்தவத்தைகள்` என்றும் உணரற்பாலன - என்றதாயிற்று. சகலத்திற் சகலம் `மகாசகலம்` - எனப்படும் இவற்றைக் கூட்டிக்கணக்கிடின் மூவைந்து பதினைந்தாதல் அறிக. இனி, `யோகாலவத்தைகள் - என்பனவும் சகலத்தில் நிகழ் வனவேயாதலின் அவற்றைக்கூட்ட, சகலத்தில் நிகழும் அவத்தைகள் இருபதாம், அவை நிற்க. தனியே கேவலத்தில் ஐந்தும், தனியே சுத்தத்தில் ஐந்தும் கூட்ட அவத்தைகள் முப்பதாம். `இவற்றுள் சகலத்தில் நிகழும் அவத்தைகளே பெரும்பாலன` - என்றது உணர்த் துதற்கே` `மாறா மலம் ஐந்தின் மன்னும் அவத்தையின்` என்றார். கேவலத்தில் மன்னும் மலம் ஆணவம் ஒன்றே சுத்தத்தில் யாதொரு மலமும் இல்லை. ஆகவே, `மலம் ஐந்தால் மன்னும் அவத்தை` என்றது சகலாவத்தையாயிற்று. `கேவலம், சகலம், சுத்தம்` எனக் காரண அவத்தைகள் மூன்று. அவை ஒவ்வொன்றிலும் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தும்காரிய அவத்தைகள். ஈறாகாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.
இதனால், இயைபுபற்றி, `அவத்தை` என்பன பலவும் குறிப்பால் தொகுத்துணர்த்தப்பட்டன.