ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

English Meaning:
Out of the Five Elements are Born the Five Senses

One the Child for Space—Sound
Two for Wind—Sound and Touch
Three for Fire—Sound, Touch and Light
Four for Water — Sound, Touch, Light and Taste
Five for Earth — Sound, Touch, Light, Taste and Smell
This was not of yore there, before creation began
Before the maiden Sakti (Spirit), the maiden (Matter) Maya loved.
Tamil Meaning:
ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன் மணிக்கு மகன் ஒருவன்தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப்போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள் போல அழகு மிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னி யாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.
Special Remark:
`அதனால் இவைகள் எல்லாம் உளவாயின` என்பது குறிப்பெச்சம் `உலகம் சிவம் சத்திகளின் விளையாட்டே` என்பது பற்றிச் சிலவற்றைச் சத்தியின் மேலும், சிலவற்றைச் சிவத்தின்மேலும் வைத்துக் கூறினார். மகேசுவரன் அருவனும், அருவுருவனும் ஆகாது உருவன் ஆதலின், `மூர்த்தி` - என்றார். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்திற்கும் சதாசிவன் முதலிய ஐவர் அதிதேவர் ஆதல் பற்றி, அவற்றில் உள்ள குணங்கள் அவர் ஈன்ற மக்களாக உவமித்து ஓதினார். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் - என்பன ஆகாயம் முதலியவற்றில் ஒன்று தொடங்கி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என இத்துணையவாகப் பொருந்தியிருத்தலை அறிந்துகொள்க. ஐம்பூதங்களை வழிபடுதற்கண் அவை அவற்றின் அதிதேவராலே செயற்படுதலை அறிந்து வழிபட்ட வழியே பயன் விளையும் ஆகலின், அவற்றை அவ்வாறறிதற் பொருட்டு இம்மந்திரத்தை ஓதினார். பஞ்ச பூதங்களின் முறைமையே பஞ்ச கலைகட்கும் ஆதலை உணர்க. வது - மணத்திற்கு உரிய பெண். விட்டுணு போகத்தையே தருதல் பற்றி, அவனது சத்தியைக் `கன்னி` என்றுங் கூறினார். பின்னர் வந்த கன்னி, சத்தி உலகத்தை நோக்குதல் இன்றித் தன்னிலையில் நின்ற நிலைமையைக் குறிப்பால் உணர்த்திற்று. கன்னியின்கண்ணே காதலித்தான்` - என ஏழாவது விரிக்க காதலித்தல், இங்கு உலகத்தைத் தோற்றுவிக்க விரும்பி நின்றது. காதலித்தற்கு வினைமுதல் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், மேற்கூறப்பட்ட பூத சயத்திற்கு அறியற்பாலன சில கூறப்பட்டன.