ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.

English Meaning:
Meet God in the Body By the Yoga Way

They know not how To-Be;
Poor are they in Spirit;
Those, who,
Course upward the vital Ajapa
(Through breathing in Yoga way)
And sublimate the Bindu,
They meet the Lord
That destroyed Kama, the God of Love;
Comely their body becomes
And indestructible here remains.
Tamil Meaning:
அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ் வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப்போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.
Special Remark:
`சிவன் நான்` எனப்பொருள்படும் மந்திரம், `சிவோகம்` என்பது. அம்ச மந்திரத்தை, `சோகம்` என மாற்றிய வழியும் அதன் உண்மைப் பொருள் `சிவோகம்` என்பதேயாதல் பற்றி, `அசபையை மாற்றி` என்றார். முகத்தல் - பிராணவாயுவைக் கும்பித்தல். இங்குக் கூறியவற்றையெல்லாம் கல்வி கேள்விகளால் அறிந்திருந்தும் அவ்வாறு செய்யாதாரை நோக்கியே, `ஏழைகள்` என்றும், `அறிகிலர்` என்றும் கூறினார். `அறிவினான் ஆகுவ துண்டோ`l எனத் திருவள்ளுவர் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால் யாக்கை நிலையாதாயினும் அதனை நீட்டிக்கும் வழியை அறிந்தோர் அது செய்யாதிருத்தலின் குற்றம் கூறப்பட்டது.