ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

English Meaning:
Lord Placed in Concealment the Sixteen Kalas and the Fourteen Inner Tattvas

The Tattvas four and ten
That in me lay concealed,
The Pure One appeared
And in bounty revealed;
The Kalas six and ten
That to me lend grace
He placed, to none beknown,
My thoughts in Him to centre.
Tamil Meaning:
அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப் பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.
Special Remark:
`அதனால் நான் கருவிக் கூட்டத்தினின்றும் வெளி யேறினேன்` என்பது குறிப்பெச்சம்.
`ஆரியன் ஒடுங்கிய சித்தினை அறுபத்துள் ஒளித்திட்டு வைத்தான். (பின்பு அவனே) வந்து அளிக்கும் கலைகளினால் என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறை அளித்தனன்` என இயைத்துக்கொள்க.
`ஆரியன்` என்பது இரட்டுற மொழிதலாய் முன்பு `பெரி யோன்` எனவும், பின்பு, `ஆசிரியன்` எனவும் இருபொருள் தந்தது. இரண்டாவது பொருட்கு `ஆகி என ஆக்கச் சொல் விரித்துரைக்க.
`ஒரு பதினாலை` - என்பது பாடம் அன்று. ஒரு பதினாறு - பிராசாத கலைகள் பதினாறு. அவற்றை உபதேசமுறையான் அன்றி அறிதல் கூடாமையின், `என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறு` என்றும், அவற்றை அறிந்து அவ்யோகத்தை (பிராசாத யோகத்தை)ச் செய்யவே உடற்கூறுகள் அனைத்தும் இனிது விளங்கி, உயிரினது நிலையும் புலப்படுதல் பற்றி, `ஆரியன் வந்து அளித்தனன்` - என அப்பேற்றினது சிறப்பையும் கூறினார்.
இதனால், யோகிகட்கு அவத்தை பேதங்கள் யாவும் இனிது விளங்குதல் கூறப்பட்டது.