ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

English Meaning:
Where Tattvas Stand in the Four States of Jiva Awareness

In the Waking State (Jagra)
The Tattvas twenty and five
In Eye-Brow Centre their position take;
In the Dream State (Swapna)
Tattvas ten and four
In Throat Centre their hold take;
In Deep Sleep state (Sushupti)
The Purusha (Soul) stands
Alone in Heart Centre;
In Turiya State (Fourth)
He (Purusha) stands
In Centre that is Navel.
Tamil Meaning:
மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம்புருவநடு, அவற்றுள் மத்தியா லவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறை வின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன் மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்து விகங்கள். `முப்பத் தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங் குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.
Special Remark:
இம்மந்திரத்தில், `மத்திமை` என்றது புருவ நடுவை. `சாக்கிரம் என்றது, அதிகாரத்தால் கீழாலவத்தைச் சாக்கிரமாயிற்று. `ஐயைந்து` என்றது, பிராணாதி வாயுக்கள் பத்தினையும் விடுத்து, அஃது, ஒன்று இடைவிட்டு வரும் மந்திரத்தால் விளங்கும். `ஐயைந்தால் என உருபு விரித்து மத்திமையில் ஐயைந்தால் சாக்கிரம் ஆனது` என இயைத்துக் கொள்க.
இனி, இரண்டாம் அடியில், `மேற்கூறிய ஐயைந்தில் விடயங் களாய் நிற்கும் கருவிகள் பதினான்கினால் கண்டத்தில் சொப்பனம் நிகழும் என்பர்` எனக் கூறினார் `விடயங்களாய் நிற்கும் கருவிகள்` என்றதனால், `அவ்விடயங்களை அறிகின்ற கருவிகள் சாக்கிரத் தோடே நின்றுவிடும்` என்பதாயிற்று. அவையாவன ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்துமாம், புருடன் கருவியாகாமை பற்றி அதனை நீக்கி, ``பன்னான்கு`` என்றார். ஆகவே, சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து, அந்தக் கரணம் நான்கு புருடன் ஒன்று என இருபத்தைந்து கருவிகளால் கண்டத்தானத்தில் சொப்பனம் நிகழும் என்றமை அறிக.
மூன்றாம் அடியில், `இதயம்` என்பது இரட்டுறமொழிதலாய், முன்னர்ச் சித்தத்திற்குப் பரியாயப் பெயராயும், பின்னர் இருதயத் தானத்தைக் குறிப்பதாயும் இருபொருள் தந்து நின்றது. ஆகவே, `புருடன், சித்தம்` என்னும் இருகருவிகளாலே இருதயத் தானத்தில் சுழுத்தி நிகழும்` எனக் கூறியது காண்க. சுழுத்தியைச் செய்யுள் நோக்கி, `சுழுனை` என்றார். முதற்றொட்டே வாயுக்களைக் கூறாமை யால், இங்கும் கூறிற்றிலர் ஆதலின் `பிராணன்` என்னும் ஒரு வாயு மட்டும் சுழுத்தியில் நிற்கும் என்பது அறிக. அவ்வாயுவைக் கூட்டக் கருவிகள் மூன்றாகும். `பொய் கண்டிலாத` என்றது, `விடயங்களை நன்கு உணர்ந்து வருகின்ற` என்றபடி. எனவே ஈற்றடியில் `மெய்கண் டவன் என்றது அப்புருடனை ஆயிற்று. ஆகவே, அஃது ஒன்றினாலே உந்தித்தானத்தில் துரியம் நிகழும்` என்றதாயிற்று. இங்கும் பிராணன் உண்டு. ஆகவே, சுழுத்தியோடு நீங்கியது சித்தம் ஒன்றுமேயாயிற்று.
துரியத்தைக் கடந்த துரியாதீதத்தில் தத்துவம் பற்றிக் கூறற் பாலது இல்லாமையால் அதனைக் கூறாதொழிந்தார். ஆகவே, புருடன் ஒரு காலத்தும் நீங்குதல் கூடாது ஆகையால், `அதீதம்` பிராணன் ஒன்றும் நீங்கப் புருடன் மட்டும் இருப்பதாயிற்று. அதற்கு இடம் மூலாதாரம் - என்பதும் கீழாலவத்தை இறுதியில் உந்தியைக் கூறியொழிந்ததனால் விளங்கும். `மெய்கண்டவனால் உந்தியில் துரியம் ஆகும்` என்க.
இதனால், கீழாலவத்தை ஐந்தன் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.