ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

English Meaning:
Siva the Beginning and End of Five Avastas

Of the Five Avastas Jagra commencing
That to Tattvas six and thirty pertain,
The Fourth is the luminous Turiya;
Passing beyond to Turiyatita
The Two in One inseparate merge
The Jiva himself Siva becoming;
This the Order do know,
The Siva that stands in the Beginning
Becomes verily End of Experience all.
Tamil Meaning:
முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியா லவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங்களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Special Remark:
`ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று` எனப்பட்டன சிவ தத்துவங்களின் எண்ணிக்கையே. வித்தியா தத்துவம் ஏழில் புருடன் தனித்தத்துவம் அன்று. மாயை காரணமாய் நிற்பதன்றிச் செயற் படாது. அவையொழிந்த ஐந்துமே செயற்படுவன ஆதலின் சிவ தத்துவம் ஐந்தும் அந்த ஐந்தையே செலுத்தி நிற்கும். செலுத்தும் முறை யாவது, சிவம் - காலம், சத்தி - நியதி. சாதாக்கியம் - கலை. ஈசுரம் - வித்தை. சுத்தவித்தை - அராகம் என்க. செலுத்துவனவற்றில் நீங்குவன சுத்தவித்தை முதலாகவும், அதற்கேற்பச் செலுத்தப்படுவன நீங்குதலும் அராகம் முதலாகவுமாய் நிகழும். தத்தவங்களை எண்ணுங்கால் தோற்ற முறை பற்றி எண்ணுதல் வழக்காதல் பற்றி `நியதி முதலாக` என்றாராயினும் நீங்கும் முறை அராகம் முதலாகவே என்க. செலுத் துவன செலுத்தப்படுவனவற்றின் இயைபை வேறு கூறுவாரும் உளர்.
`இரண்டொன்று` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர் உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் `மூன்று` எனவும், பின்னர் உம்மைத் தொகையாய் `இரண்டும், ஒன்றும்` எனவும் இருபொருள் தந்தது. நியதி முதல் - நியதி முதலிய தத்துவங்கள். `அவை ஆகும்படி சிவம் ஈறாய் அப்பதி ஆகும்` என்க. பதி - சிவ தத்துவம்.
கீழாலவத்தையில் நிகழும் சொப்பனம் முதலியவற்றை, `இஃது இத்தன்மையது` என யாவரும் தாமும் உணரவும். பிறர்க்கு உணர்த்தவும் கூடிய முறையில் அவை இனிது விளங்கக் கால நீட்டிப் புடன் அன்றாட அனுபவமாய் நிகழும். மத்தியாலவத்தை அவ்வா றின்றி நன்கு விழித்திருக்கும்பொழுதே மிக விரைவில் நினைப்பும், மறப்புமாய் மாறி மாறி நிகழ்வன ஆதலின் அவற்றை யாவரும் தாமும் இனிதுணர்தல் அரிது; பிறர்க்கும் உணர்த்துதல் அரிது. இதன் வேகத்திற்குக் கறங்கோலையை (கற்றாடி ஓலையை) உவமையாகக் கூறுவர். அதபற்றி அருணந்தி சிவாசாரியரும்,
``அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதரும்; கரணந் தன்னில் செயல்தொறும் கண்டுகொள்நீ``*
என்னும் அளவே கூறிச் சென்றார். ஆயினும் சிவாக்கிரர் முதலியோர் கைப்பொருளைத் தொலைத்துவிட்டவன் அத்துன்பமிகுதியாலும், மற்றும் புத்திர சோகம் முதலியவற்றாலும், மூர்ச்சை எய்துதலை `மத்திய துரியாதீதம்` - என வைத்து, அதினின்றும் சிறிது சிறிதாகத் தெளி வடைந்து பழைய நிலையை எய்தும் வரையிலான நிகழ்ச்சிகளை மத்திய துரிய, மத்தி சுழுத்தி, மத்திய சொப்பன, மத்திய சாக்கிரா வத்தைகளாக வகுத்துக் காட்டுவர். ஆயினும், அவையெல்லாம் ஓரளவு தரும் விளக்கங்களேயன்றி, `அவைதம் மத்தியாலவத்தை` எனக்கொண்டு விடுதல் கூடாது. மத்தியாலவத்தை விழிப்புநிலையில் நாம் பொருள் களை உணர்ந்து நிற்கும்பொழுதே நிகழ்வனவாம். அவற்றுள் நினைப்பு, `சகலத்தில் சகலம் என்றும், மறப்பு, `சகலத்தில் கேவலம்` என்றும் சொல்லப்படும். சகலம் `பகல்` எனவும், கேவலம் `இரவு` எனவும் உருவகித்து வழங்கப்படும். ஆகவே, நினைப்பும், மறப்பும் இல்லாத சுத்த நிலை `இராப் பகல் அற்ற இடம்` எனக் கூறப் படுகின்றது.
இதனால், மத்தியாலவத்தைகளின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது. `அவத்தைகளின் பொது இயல்புகள் முதற்கண் ஒருங்கு வைத்துக் காட்டப்படவேண்டும் என்னும் கருத்தினால் இவை இங்குக் கூறப்பட்டன.