ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

English Meaning:
State Beyond Turiya — (Turiyatita)

Turiya is in Jagrat experienced;
The foxes fourteen (Indriyas etc.
of themselves die;
The swift stead of Prana flees,
How that State beyond Turiya (Turiyatita) is,
Impossible to state, indeed.
Tamil Meaning:
சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவு பவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடையிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்லவாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால்தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந் திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.
Special Remark:
எனவே, நரிகள் பதினான்கு இல்லையென்றாலும் பரி (குதிரை)யின் ஓட்டம் இருந்ததால் துரியநிலை `இவ்வாறு இருந்தது` எனச் சொல்லத் தக்கதாயிற்று - என்பதாம். `நான் சுகமாகத் துயின்றேன்` - எனப் பின்பு விழிப்பு நிலையில் கூறுவது, துரிய நிலையில் எய்திய அனுபவத்தையேயாம். அந்த அனுபவமும் அறியப்படாத நிலையே கீழாலவத்தைத் துரியாதீத நிலை என்க. `இறந்த` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கீழாலவத்தைத் துரியாதீத நிலை உயிர் தன்னையும் மறந்திருக்கும் நிலை` - என்பது கூறப்பட்டது.