ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்

பதிகங்கள்

Photo

கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

English Meaning:
Fourteen Tattvas in Dream State

In Dream State
The Senses Five experienced;
The Tanmatras Five too;
And Antahkaranas Four as well;
Having experienced thus in Dream State
The Jiva returned to Jagra State to experience;
There he stood in full knowledge of world.
Tamil Meaning:
சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபக நிலையைப் பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும் செய்திருப்பான்.
Special Remark:
ஐந்து, ஐந்து, நான்கு என்னும் எண்கள் அவ்வவ்விடம் பற்றி அவ்வக் கருவிகளை உணர்த்தின. சிறப்புப் பற்றி ஞானேந்திரிய விடயங்களையே கூறினாராயினும் இனம் பற்றிக் கன்மேந்திரிய விடயங்களும் அவற்றிற்குரிய கன்மேந்திரியங்களும், அவற்றிற்கு, வலிமை தருகின்ற வாயுக்கள் பத்தும் கொள்ளப்படும். படவே, `எடுத்துக் கூறிய பதினைந்துடன் இவ்விருபதுங்கூட, அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் முப்பத்தைந்து` என்பதும், `அவற்றால் நிகழ்வது கேவல சாக்கிரம்` என்பதும் விளங்கும். `அமர்ந்து நின்றான்` - என்னும் பயனிலைக்குத் தோன்றா எழுவாயாய் நின்றது `புருடன்` என்பதே யாகலின், அதுவும் எடுத்துக் கூறப்பட்டதாயிற்று. மந்தமாய் நிகழினும் ஐம்புலனையும் உணர்தலிற் குறையாமைபற்றி. `அண்டமும் தானாய் அமர்ந்து நின்றான்` என்றார்.
இதனால் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் கூறப்பட்டன.