ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

English Meaning:
Tiripurai as Creative Force

She is Omkari, the Mother of Pranava Form,
Of indelible green hue is Her Form,
As Ankhari of Creative Force She became
And gave birth to the Five Gods
And then lapsed sweet
Into the music of Her mantra ``Hrim. ``
Tamil Meaning:
பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனி யளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.
Special Remark:
`உயிர்களின் வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவ சத்தி அவற்றிற்கு அகப்படுதற் பொருட்டுக் கருணையால் இவ்வாறு உருவும், பெயரும்கொண்டு நின்று, உயிர்களை உய்வித்தற்குரிய செயல்களைச் செய்கின்றது` என்பதாம். அகங்காரம் - `யான் இது செய்வேன்` என முனைதல். இது தனக்கு ஏலாததன்கண் தோன்றின் குற்றமாகும். ஆகவே, தமக்கெனச் சுதந்திரம் இல்லாத உயிர்கட்கு இது குற்றமாகின்றது. சிவசத்திக்குச் சிறப்பாகின்றது. அகங்காரம், `ஆங்காரம்` என மருவி வழங்கும்.
``ஓருரு வாயினை; மான் ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை`` 1
என்பது காண்க. சதாசிவன் முதலிய ஐவராவார், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்போர். இவர் சம்பு பட்சத் தினர் என்க. ஈற்றடி அவள் தன் அடியார்க்குப் பயன் தரும் முறையைக் கூறியவாறு. `ஹ்ரீம்` என்பதில் முதற்கண் உள்ள மெய்யின் சிதை வாகிய இகரம், அம்மெய்போலவே வேறெண்ணப் படாது நின்றது.
இதனால், திரிபுரையது கருணைச் சிறப்புக் கூறப்பட்டது.