ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

English Meaning:
Blessings of Tiripurai

In the Three Cities —(Triangle)—of themselves arose
Of three forms, the One She is;
Of color gold, red, and white She is,
Knowledge, enjoyment and Mukti she grants.
Tamil Meaning:
சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
Special Remark:
`உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் மூவரும் ஒற்றுமை பற்றி, `சிவன்` என ஒருவராக அடக்கப்பட்டனர். மூவுரு ஓர் உரு - மூவுருவையும் அடக்கி உள்ள ஓர் உரு. எனவே, பிரேரக தத்துவங்களில் பலவாகி நிற்கும் ஆதிசத்தியைக் குறித்ததாயிற்று. சத்தி, `நீல நிறம் உடையள்` என்பது பற்றி `நீலி` எனப்படுதலேயன்றி, `கௌர நிறம் உடையள்` என்பது பற்றி, `கௌரி` எனவும் படுவளாதலின், இங்கு அவளுக்குப் பொன்னிறம் கூறினார்.
இதனால், ஒருத்தியே மூவராய் முத்தொழில் இயற்றியும், ஐவராய் ஐந்தொழில் இயற்றியும் நிற்கும் தலைவர் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்றல் கூறப்பட்டது.