ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

English Meaning:
She Holds the Book of Knowledge

She stood as body and life,
She—the Parasakti—took me to Siva-State,
She in me entered and stood one in my awareness
She of the ethereal Light,
She that holds the Book of Knowledge in Her Hand Divine.
Tamil Meaning:
சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
Special Remark:
``அவன்`` எனச் சுட்டுப்பெயர் செய்யுளில் முன்னர் வந்தது. `சிவன்` என்னும் உயர்திணைப்பெயர் இங்குத் திரிபு புணர்ச்சி எய்தியது. கதி - நடை; செயல். ``சிவகதி`` என்பது, `அரச தண்டம்` என்பதுபோல ஆறாவதன் தொகை, `சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்`` எனக் கூட்டி உரைக்க. ``உணர்வு`` என்பது அனுபவ ஞானத்தை. அதனால், இன்பமும் பெறப்பட்டது. ``ஏடு அங்கையாள்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின், அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாதல் அறிக. ``ஏன்றாள்`` என்பது குறுகிநின்றது. நான்காம் அடியில் `நின்றாள்` என ஓதுதல் பாடமன்று.
இதனால், திரிபுரை ஞானத்தைப் படிமுறையால் அளித்தல் கூறப்பட்டது.