ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

English Meaning:
Manifestations of Tiripurai

Tiripurai, Sundari, Andari,
Kum-Kumi, Pari Purai, Narani,
The dark hued Easi, Manonmani
Thus of forms diverse and hues many,
One Sakti manifests several.
Tamil Meaning:
மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.
Special Remark:
`திரிபுரை` என்பதன் காரணம் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறப்பட்டது. சுந்தரி - மிக்க அழகுடையவள். அந்தரி - ஆகாயத்தில் விளங்குபவள். சிந்துரம் - திலகம். இது நீட்டல் பெற்றது. `சிந்துரத்தை அணிந்த பரிபுரை` என்க. `சிந்துரை` என வேறோதற்பாலதனைச் செய்யுள் நோக்கித் தொகுத்தோதினார். பரிபுரை - சிலம்பணிந்தவள். நாரணி - `நாரணன் தங்கை` எனப் படுபவள். நாரணன் சிவனுக்குப் புருட ரூப சத்தியாதல் பற்றிப் பெண்ணாகச் சொல்லப்படுகின்ற இவள், `அவனுக்குத் தங்கை` எனப் படுகின்றாள். ஆம் - பொருந்திய, பல வன்னத்தி - பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள். அந்நிறங்களுள் சிறப்பாக நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி,மனோன்மனி` என்னும் பெயர்களைப் பெற்று நிற்பாள் என்பது மூன்றாம் அடியின் பொருள். இவ்வாறு வருகின்ற பல்வேறு நிலைகளில் நிற்பாள் என்க.
இதனால், மேலை மந்திரத்து இறுதியிற் கூறப்பட்ட சத்திதன் மூர்த்தி வேறுபாடுகள் பல விரித்துக் கூறப்பட்டன. அதிகாரமும் சத்திபேதம் ஆதல் நினைவு கூரத்தக்கது.