ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

English Meaning:
She is Cause of Cause

She is, and She is not, they say
Yet She revealed to me Her Form;
She stood filling the Dance arena at Thillai;
They saw not;
She stood as Cause of Cause;
Pervading spheres Three.
Tamil Meaning:
காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரி புரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவியதில்லை யின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.
Special Remark:
``காரண காரணி`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. ``நின்றது`` முதலிய மூன்றும் தொழிற் பெயராய்ச் செவ் வெண்ணாக எண்ணப்பட்டன. காரணமாவன, தத்துவங்களும், அவற்றின் தலைமைக் கடவுள்களுமாம். முன்னர் அக்கடவுள்களைப் படைத்து, அவர்கள் வாயிலாகத் தத்துவங்களைத் தோற்றி, நிறுத்தி, ஒடுக்கச் செய்து, பின்பு அக்கடவுள்களையும் ஒடுக்குதல் பற்றி, ``காரண காரணி`` என்றார். இது நான்காவதன் தொகை. காரணி - காரணமாய் நிற்பவள், `தான்` என்பது சிவத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல். மண்டிலம் - வட்டம்; `உலகம்` என்றவாறு. `உடம்பில் உள்ள அக்கினி சூரிய சந்திர மண்டலங்கள்` என்றலும் ஆம். ஈற்றில், `அதனையும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், திரிபுரை மெய்ப் பொருளேயாதல் கூறப்பட்டது.