ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

English Meaning:
Chant Her Name and See Past Present and Future

She created all things diverse,
She is sister of Mal that protects all,
She the bejewelled Mother,
On Lotus of Dharma seated;
Chant Her name as Siva Sakti, times infinite
You will see Her Light,
And all things past, present and future.
Tamil Meaning:
ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படு பவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப் பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.
Special Remark:
``அண்ணுதல்`` என்பது ``அண்டுதல்`` என மருவி வழங்கும். நீதி - நடுவு நிலைமை. `நீதியாளரது மனத்தாமரை என்றற்கு, ``நீதி மலர்`` என்றார். திரிபுரையது மந்திரம், ``ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் த்ரிபுராயை நம;`` என்பது. இது நவாக்கரியாதலை நோக்குக. மூலாதாரம் முதலிய ஏழ் நிலையுள் நடுவணதாகிய அனாகதத்தை, ``பாதி`` என்றார். `ஆறாதாரங்களில் மேற்பாதியில் முன் உள்ளது` என்றலுமாம்.
இதனால், திரிபுரையது ஆசனமும், மந்திரமும், அவ்வாற்றாற் செய்யும் வழிபாட்டின் பயனும் கூறப்பட்டன.