ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

English Meaning:
She Holds the Book of Knowledge

She stood as body and life,
She—the Parasakti—took me to Siva-State,
She in me entered and stood one in my awareness
She of the ethereal Light,
She that holds the Book of Knowledge in Her Hand Divine.
Tamil Meaning:
எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.
Special Remark:
`இறை` என்பது தொழிலாகு பெயராதலின், பெண் பாற்கும் உரியதாம். `இறைவி` என்பது குறைந்து நின்றது எனினுமாம். `எங்கள் இறை` என மாறிக் கூட்டுக. ``பாடுந் திருமுறை` என்றது, வீணையுடைமையையும் குறித்தவாறு. `திருமுறையைப் பாடும்` என்ற லுமாம். ``பார்ப்பதி`` என்றது `பார்ப்பதியேயான அவள்` என்றபடி.
இதனால், முதற்கண்ணதாகிய நூலறிவைத் தரும் அவளது வடிவியல்பு வகுத்துக் கூறப்பட்டது.