ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

English Meaning:
Primal Virgin

Sing Her praise, adore Her Feet
Thus beseech Her and worship Her,
Meditate on Her,
Who is with elephant goad and noose
And cane of sugar;
She, the Primal Virgin.
Tamil Meaning:
காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``வழிபடுமாறு`` என்பது, வினையெச்சப்பொருட்டாய் நின்றது. ``பின்னை`` என்பது, `மற்று` என்னும் பொருளது. `பிள்ளை` என்பது பாடமன்று. ``ஆகுமாம்`` என்பதில் ஆம், அசைநிலை. `ஆம் ஆதி` என இயைத்து, `நன்மையை அடைதற்கு நிமித்தமாகிய ஆதிசத்தி` என உரைப்பினும் ஆம்.
இதனால், திரிபுரையை இராசேசுவரியாகக் கண்டு வழிபடுக என்பது கூறப்பட்டது. அதன் பொருட்டு, அவளது வடிவம் மறித்தும் உணர்த்தப்பட்டது.