ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

பதிகங்கள்

Photo

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

English Meaning:
Adore Her as Siva-Sakti

As light within, She inseparable stands;
The Mother of fragrant flower bedecked tresses
In the Lord, in union stands;
They who then rise in adoration
Shall Her bounteous Grace receive.
Tamil Meaning:
உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.
Special Remark:
`உணர்ந்தவழி` என்பது `உணர்ந்து` எனத் திரிந்து நின்றது, நிற்றல் - விளங்கி நிற்றல். `ஆகி` என்பது பெயர். மூன்றாம் அடியில் ``உடனே`` என்றது, `உடனாகியே` என்றவாறு. `கணித்து` என்பது மெலிந்து, நின்றது. அளித்தலுக்கு எழுவாய், அதிகாரத்தால் வந்தது.
இதனால், சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டது. மேல் (1038) சிவனைச் சத்தியோ டன்றித் தனித்து நிற்பவனாக எண்ணுதல் கூடாமை கூறப்பட்டதையும் இங்கு நினைவு கூர்க.