ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 

English Meaning:
Life`s Procession Leads But to the Grave
With horse and sword and canopy outspread,
Man fills his fugitive years with pride of life;
But even as the grand cavalcade sweeps past,
Circling from left to right, expires the breath of life.
Tamil Meaning:
வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.
Special Remark:
எனவே, `இம்மை வாழ்வைப் பெரிதாக நினையாது மறுமை நோக்கி முயல்க` என்பது கூறப்பட்டதாம். ``இடையும்`` என்றது `இடையதாகின்ற` என்றவாறு, இனி, உம்மையை அசை நிலை யாக்கினும் ஆம், ``புடையும்`` என்பதில் உள்ள உம்மை, `அயலும்` என இறந்தது தழுவிற்று. `ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல், `இடையும் அக்காலம்` புடையும் மனிதர் ஆர, நடுவே குடையும், குதிரையும், வாளும் கொண்டு இருந்து போகும் அப்போது ஆருயிர் அடையும் இடமே வலம் ஆம்` எனக் கூட்டுக. `மனிதனார்` என்பது பாடம் அன்று, ``அப்போதே`` என்ற ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. வலம் - வலிமை.