ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

English Meaning:
TRANSITORINESS OF BODY
Dust Into Dust–That is Body`s Way
At first it was clay, then it divided into two,
It was keeping well when evil entered,
Even as clear water falling from the skies,
Mixed with the mud becomes muddy,
Men degenerated and became subject to birth and death.
Tamil Meaning:
இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.
Special Remark:
`குறிக்கோள்` என்றது மக்கட் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை. அதனை, எடுத்த பிறப்பிலே அடையக் கருதுவார் அதன்பொருட்டு யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்வாராகலின், அத்தகையோரது உடம்பைத் தீயினாற் சுடப்பட்ட பாண்டத்தோடும், அக்கருத்தில்லாதாரது உடம்பைத் தீயினாற் சுடப்படாத பாண்டத்தோடும் உவமித்தார். இதனானே, பின்னர்க் கூறப்படும் காய சித்தி உபாயத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.
``எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலைஆழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு`` -தி.9. ப.17 பா.7
என இவ்வுவமையைப் பிற்றை ஆசிரியர், திருவருள் கைவரப் பெற்றார் பெறாதாரது உணர்வுகட்குக் கூறினார். இனி இங்கும் அவ்வாறே கொண்டு, ``மண்`` என்றது உடம்பையும், `பாத்திரம்`` என்பது அதனை ஏற்று ஒட்டி நிற்கின்ற உயிரது உணர்வையும் குறிப் பனவாக வைத்து உரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு மீண்டும் மண் ணாதல் மீளப் பிறவியில் வீழ்தலும், இறத்தல் பயனின்றி ஒழிதலு மாகும். ஆகவே, `அவ்வாறாகாது, மட்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கட் பிறப்பில் அமைந்த உணர்வை அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அரு ளுணர்வுடையதாக்கிக் கொள்க. என்பது இதனாற் கூறப்பட்ட பொருளாகும். இரண்டுரைக்கும் விண்ணின்று விழும் வீர் உடம்பை வீழ்த்துகின்ற இறுதிக் காலமேயாம்.
இதனால்,மக்கட் பிறப்பின் பயனை அடையமுயலுதலைப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
``அன்றறிவாம் என்னா தறம்செய்க`` -குறள். 36
எனவும்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும். -குறள். 335
எனவும் திருவள்ளுவ நாயனாரும் கூறினார்.