ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 

English Meaning:
Body is Burnt to Ashes; Beyond That We Know Not
Five the senses, six the chakras
Thirty the joints, eighteen the sides,
Nine the ligaments, fifteen the rows—
All to ashes burnt—no more we know beside.
Tamil Meaning:
தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.
Special Remark:
பறி - கூடை. கடை - வாயில்; கட்டு. `ஆறு சடை` என்பது பாடம் அன்று. சந்து - வெளி. வாயுக்கள் முதலியவற்றின் இயக்கமே உயிரின் உணர்வு நிகழ்ச்சிக்கு ஏதுவாகலின் அவற்றை நன்கு உலாவும் முற்றம் என்றார். சார்வு - சார்ந்த பொருள். ``சார்வு பதினெட்டு` என்பதனை ``தலைப் பறி`` என்றதன்பின்னர்க் கூட்டுக. உண்ணப்படும் (நுகரப்படும்) பொருள்களாகிய சத்தம் முதலியவற்றை உண்பன போலக் கூறினார். இதனால், உடலின் ஆக்கப்பாடும், செயற்பாடும் கூறி, அவை அனைத்தும் நிலையாமை உடையவாதல் உணர்த்தியவாறு.