ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 

English Meaning:
Body is Fragile Frame
No roofing above, no standing ground below,
Two legs to support and a central beam athwart
Rudely thatched on top but unlined within,
An empty vessel in Karmic garb enwrapt.
Tamil Meaning:
ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.
Special Remark:
`அஃது எவ்வாறு நீடித்து நிற்கும்? விரைவில் வீழ்ந் தொழிந்தது` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளை முன்னர் வைத்து உரைக்க. பின்னர், ``வேலையான்`` என்றலால் முன்னர் ``மேய்ந்தவர்`` என்றது உடையவரையாயிற்று. ``மேய்ந்தவர்`` என்றது, `வேய முயன்றவர்` என்றபடி, ஊடு - அத் தொழிலினுள்; இதன் பின், `புக்கு` என்பது எஞ்சி நின்றது. `வரியாமையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. வரிதல் - கட்டுதல். வேலையான் - கூலிக்கு வேலை செய்பவன். காலத்தைக் குறிக்கும் `வேலை` என்பது, அதனை முதலாகக் கொண்டு நிகழும் தொழிலைக் குறித்தலின், கருவியாகு பெயர். ``கூலி கொடுத்து என்வேலை கொள்வாருண்டோ`` (திருவிளையாடல் பு. . மண்சுமந்தது . 18) என்பது முதலிய இடங்களிலும் இவ்வாறு வருதல் காணப்படும். `வேலையாள் மேய்ந்த` என்று பாடம் ஓதுதலும் ஆம். ``வெள்ளி`` என்றதில் ளகர வொற்று, விரித்தல். பொத்தலை `வெளி` என்றார். தளி - இல்லம். `வேலையாள் நன்கு வேயாமையால் எடுத்தபொழுதே பொத்தற் கூரையாய்க் கிடந்தது; மற்றும் பல குறைபாடுகளும் உள` என்றதாம். தலையிலும் பிரமந்திரம் (பெருந்துளை) முதலிய புழைகள் இருத்தலின், `மேலும் முகடில்லை` என்றார். கீழே அடிகள் நிலத்தினுள் ஊன்றாமை வெளிப்படை. ``காலும்`` என்ற இழிவு சிறப்பும்மையால், `அது பெயருக்குக் `கால்` அன்றி, உண்மைக் கால் அன்று` என்பது போந்தது. இல்லத்திற்குக் `கால்கள்` எனப்படுவன, நிலத்தினுள் ஊன்றி நிலைத்து நிற்பன வல்லது சகடக் கால் போல உழலுவன ஆகா. ``முகட்டு அலக்கு`` என்றது முதுகெலும்பை. அதுவும் நேர் நிற்றல் அல்லது; மேலே குறுக்கிட்டு நின்றிலது. இதனால் அவை ஒப்பிற்கு வைக்கப்பட்டனவல்லது, உண்மையில் வைக்கப் படவில்லை என்றார். ``உடையவர்`` என்றது சிவபெருமானையும், `வேலையாள்` என்றது பிரமனையும், `உடை யவர் இவ்வில்லத்தை ஓலையால் வேய நினைத்தார்` என்றது `நிலையாக எடாமல், சிறிது காலத்திற்கு நிற்கவே எடுத்தார்` என்பது குறித்தவாறு. முன்பு `பந்தல்` என்றதும் இக்குறிப்புத் தோன்றவேயாம். `சிறிது காலத்திற்கு நிற்க எடுத்ததையும் தாமே செய்யாமல், பிறன் ஒருவனைக் கொண்டு செய்வித்தமையால். குறையுற்றுக் கிடந்தது` என்றவாறு.
இதனால், யாக்கையது இயல்பை உணர வல்லார்க்கு அதனது நிலையாமை எளிதின் விளங்கும் என்பது கூறப்பட்டது.