ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 

English Meaning:
Body Dead is to be cremated
The body rots with gangrene and phlegm, the Prarabdhas leave the body,
The bones turn fragile,
After verifying death by feeling the nostrils with the fingers.
They cover the body and perform the cremation
which includes the offering to the ravens.
Tamil Meaning:
`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.
Special Remark:
மேற்காட்டிய ஐயடிகள் வெண்பாவில் ``தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாமல்`` என வந்ததனை நோக்குக. `காக்கைக்குப் பலியிடுதல் ஒரு சடங்கு`` என்பர். ``காக்கைக்கே இரை யாகிக் கழிவரே``(தி.5 ப.90 பா.5) என்னும் அப்பர் திருமொழியால் உடல் மண்ணில் இடப்பட்டுப் பின் காக்கைக்கு இரையாதலும் கொள்ளப்படும். ``முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்`` (மூதுரை) என்ற ஔவையார் திருமொழியும் காணத்தக்கது. இனி, `இன்னோரன்னவை முறைப்படி அடக்கம் செய்யப்படாத உடம்பின் நிலைமையைக் குறித்தன` என்று ஒழிதலுமாம்.