ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

English Meaning:
How Soon the Dead are Forgotten
The neighbours gathered together wailing loud and long,
Denied him now a name, called him corpse,
And bore him to the burning ghat and the body burnt,
Then did a ceremonial dip—and memory of him fades away.
Tamil Meaning:
உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.
Special Remark:
`ஆதலால், ஊரவரையும் உறுதி என்று நினையாது, மேற்குறித்தவற்றைப் பெற முயல்க` என்பதாம். ஊர், ஆகுபெயர்.
ஊர், `பிணம்` என்று பேரிட்டு எடுத்தலை,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8
என ஐயடிகளும் கூறினார்.
இன்னும் அவர்.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே;
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியேல் நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. -திருவெண்பா. 14
என அருளிச் செய்தமை அறிக. இல் - மனைவி. துடிப்பு - அடக்கம் செய்ய விரைதல்.