ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

English Meaning:
God Kanda Arose Out of Lord`s Fire

Out of my Father arose six orbs of Fire
The six Faces before Him appeared;
The God Kanda in Him is intermingled;
And so is He His Son;
Thus do you in understanding connect.
Tamil Meaning:
சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
Special Remark:
இஃது ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வ பூதா நாம் I பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர் பிரஹ்மாசிவோமே அஸ்து சதாசிவோம் II `` எனச் சதாசிவனையே `ஓம்` மொழிப் பொருளாகக் கூறிய வேதம்.
``சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்``
எனக் கூறுதல் பற்றி ஐயம் நிகழாமைப் பொருட்டு அறுமுகன் ஐம்முக னின் வேறாகாமை விளக்கப்பட்டது. இதனானே, சிவாக்கினி எல்லாத் தேவர்க்கும் வாயிலாதலே யன்றிச் சிறப்புடைய முருகனுக்கும் உரித் தாதல் கூறப்பட்டதாம்.
வட்டம், இங்கு முகம். `வட்டமாயும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஏகாரம், உமையினின்றும் பிரித்த பிரிநிலை, அதனால், சிவனின் வேறன்மை இனிது விளக்கப்பட்டதாம். `கந்தனும், சுவாமியும்` என்க. `சுவாமி` என்பது சிவனுக்கே உரிய பெயராதலை, `சுவாமி நாதன்` என்னும் முருகனது பெயருள்ளும் காண்க. மாட்டு - பொருத்தம். அஃதாவது, வேத மொழியின் பொருத்தம். திருவுருத் திரத்துள் ``யாதே சிவாதநூ:`` எனத் தொடங்கும் மந்திரத்தின் தியான உருவம் அறுமுகனாகச் சொல்லப்படுதலும் இங்கு நினைக்கத்தக்கது. சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணம் குமரகோட்டப் படலத்துள், மேற்காட்டிய வேத மந்திரங்களை,
``எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும்
ஈசன் என்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன்ஓம் எனவேதாம்
சாற்றும் அல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன் ஓமெனவும்
முக்காற் கூறும்
இக்கருத்தை யறியானை எவ்வாறு விடுவிப்ப
தியம்பு மின்னோ``
என மொழி பெயர்த்துக் கூறினார். முருகன் அறுமுகச் சிவனாதலை நாயனார் இரண்டாம் தந்திரத்துள் `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள்ளும் கூறினார்.
இதனால், `வேள்வித் தீ சிவாக்கினியே` என்பது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.