ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

English Meaning:
With Fire in Pit Kundalini Fire Also Shot Forth

The sacrificial pit takes the shape of
Shining-bow and crescent moon;
The tongues of Fire shot forth
Like mythical serpents from directions eight;
And Kundalini too with its petals four
In me flamed,
Filling my inside with radiant light.
Tamil Meaning:
வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.
Special Remark:
`வில் நாப்போலும் நாவினையுடைய இளம் பிறை போல் மேவிய குண்டம்` என்க. `சொல் நால்` என்பது பாடமன்று. சுடர் நாகம், வினைத்தொகை. `திக்கெங்கும் தாவும்` என்க. இவ்வாறு உடம் பினுள் அமையுமாறு:- நாபித்தானம் குண்டமாகவும், இட நாடி வல நாடிகள் பாம்பாகவும், மூலாக்கினி மேல் எழுந்து நடு நாடிவழிச் செல்லுதல் குண்டத்தீ ஓங்குவதாகவும் அமைதலாம். `பல் நாலு` என்றது, அவ் வாயுவிற்கு வலுவூட்டுகின்ற அம்ச மந்திரத்தை. அம்ச மந்திரத்துள் ஈரிடத்தும் இங்கு விந்துவை வேறெண்ணித் தொகை கூறப்பட்டது.
இதனால், ஒளி நிலை அகத்தும், புறத்தும் ஒரு படித்தாய் நிற்குமாறு கூறப்பட்டது. இதனுள் பிறைக் குண்டம் குறிக்கப்பட்டது.