ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

English Meaning:
Pervasiveness of Kundalini Fire

Breath through Sushumna coursing,
Kundalini fire blazed aloft;
Light on top emanted,
Pervaded world,
And engulfed entire cosmic space
That I saw in me, and sought within.
Tamil Meaning:
பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத் தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந் திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலில் வைத்து, ``அப் பொரு ளாய்`` என ஆக்கம் வருவித்துரைக்க. முதலடி மூன்றாம் அடிகளில் உள்ள, `அறிந்து` என்பன, `அறியப்பட்டு` என்னும் பொருளன.
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி`` 1
என்னும் திருப்பாசுரத் திருமொழிக்குச் சேக்கிழார் இவ்வாறே.
``தோன்று காட்சிச் ``சுடர்விட் டுளன்`` என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய், அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்;
ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்`` 2
எனக் கருத்துரைத்தல் காண்க. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `நவகுண்டத் துள்ளெழும் நல்தீபத்தது` உண்மை கூறப்பட்டது.