ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

English Meaning:
The Sixteen Kalas are in the Sacred Fire

In the sacrificial pit thus formed,
The sixteen kalas luminous
Will sixteen points occupy;
Those who can see that Fire within
The broiling Pasas will not touch.
Tamil Meaning:
புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.
Special Remark:
எனவே, `பிறவாறு காண்பார்க்கு அவையொழியாது பற்றுவனவாம்` என்றதாயிற்று. உலகில் நிகழுந் தீமைகட்குக் காரணம் அவரவர் முன்செய்த வினையே. அவையொழிந்தாலல்லது, துன்பங்கள் முற்ற ஒழியா. மாற்று முறைகளால் (பரிகாரங்களால்) ஓரளவே ஒழியும் என்க.
வேள்வித்தீயின் வழியாகத் தேவர் பலரை வழிபடுதலினும், பிராசாத கலையின் அதிதேவர்களை இவ்வாறு வழிபடுதல் சிறப் புடைத்து என்றவாறு. பிராசாத கலை பற்றி முன்னைத் தந்திரக் குறிப்பில் விரித்துக் கூறப்பட்டது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேற்கூறிய குண்ட வழிபாட்டில் மிக்கதொன்றன் சிறப்புக் கூறப்பட்டது.