ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்

பதிகங்கள்

Photo

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

English Meaning:
Sacrificial Fire is Siva Himself

The Three-eyed Lord is Fire entire;
The Lord of self-same eye,
Engulfed universe entire;
With eyes in directions all,
He sees directions eight;
He is Lord, my Father,
And for all lives everywhere.
Tamil Meaning:
மூன்று கண்களை உடையவனாகிய சிவபெரு மானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.
Special Remark:
எனவே, `ஓமாக்கினியில் அவன் ஒருவனையே மந்திர நியாசங்களுடன் வழிபடின் அஃது எல்லாத் தேவர்க்கும் உவப்பாகும்` என்பது கருத்தாயிற்று. இவ்வுணர்வு தோன்றி நிலைபெறுதற் பொருட்டே, வைதிக வேள்வியில் ஓமாக்கினியை அங்கியங் கட வுளாகக் கொள்ளுதல் போலல்லாது, சிவவேள்வியில் வாகீசுவரியது பூப்பு நீராட்டு, கர்ப்பாதானம் முதலிய சடங்குகளால் அக்கினியை வாகீசுவரனால் பிறப்பித்து, அவனுக்குப் பிறப்புச் சடங்கு இயற்றி, `சிவாக்கினி` என நாம கரணம் செய்து சிவாக்கினியாக்கிக் கொள்ளும் முறை சைவாகமங்களில் விரிவாகக் கூறப்பட்டது என்க.
`அகிலமும் உண்ட அக்கண்ணனும் தானே; திசை எட்டும் கண்டவனாகிய திக்குக் கண்ணனும் ஆகி` என்க. எச்ச உம்மைகள் தொகுத்தலாயின. ``ஆகி`` என்பது பெயர். இறுதியில் `பற்றுக்கோடு` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வித் தீ சிவாக்கினியாதலின் சிறப்புக் கூறப் பட்டது.