ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

English Meaning:
Bodily Pleasures Ceased to Interest

In this body of pleasures
Like sugarcane and honey mixed,
Sprouted the Fragrance of Siva Bliss,
In eagerness my heart sought it
And I visioned the Void;
Then did the cane taste bitter
And honey sour.
Tamil Meaning:
கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, `அதன் இனிப்பு இத்தகையது` என வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இவ்வுடம்பிற்றானே உண்டாகின்றது. (அஃது அரிவையர் இன்பம். அதனால் அதனை மக்கள் பின்னும் வெறாதே விரும்பு கின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்றஓர் ஆனந்தம் உண்டு. (அது சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன; ஏதன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.
Special Remark:
எனவே, `அவை யிரண்டும் கலந்தது போன்ற இன்பமும் அவர் கடுகக் கசப்பும், புளிப்பும் ஆகின்றதேயன்றி, இனிப்பதால் இல்லை` என்பது இசையெச்சம். `இங்ஙனமாகவே அவ்வின்பம் அவர்களால் வெறுக்கப்படுவதாதலைச் சொல்ல வேண்டா` என்பதாம்.
``பெரும்பைம் புனத்தினில் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்,மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்து(து)றக் கைத்ததுவே, 3
என்னும் அனுபவ மொழியை இங்கு எண்ணுக
``கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை தோள்
புணர்ந்தால், புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்,
மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே``l
என அருளிச் செய்த திருப்பாட்டிற்கும் உலகத்தாரது பேதைமையைப் புலப்படுக்கு முகத்தால், சிவபோகமே நுகருந் தொறும் நுகருந்தொறும் புதிது புதிதாய் எல்லையின்றி வினைவதாகிய பெரும் போகம் என்னும் உண்மையை உணர்த்தலே கருத்து` என்பதைச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரத்துச் சிற்றுரையால் அறிக.
``பாலொடு தேன்கலந் தற்றே, பணிமொழி
வாலெயி றூறிய நீர்``9
என்னும் திருவள்ளுவப் பயனும் அன்னது.
இதனுள் பாடம்மிக வேறு பட்டதுய ``ஓர் காயத்தில்`` என்பதை முதளிற் கூட்டுக. ``ஓர் காயம்`` என்றாரேனும், இன்பத்தை `ஓர் இன்பம்` என்றலே கருத்து, கலந்தது - கலந்தது போன்றது.
இதன்பின் `உண்டு ஆயினும்` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. `ஆகிய என்னும் ஆக்கச்சொல் உவமை குறித்து நின்றது விரும்புதற்கு எழுவாயும், கைத்தல் புளித்தல்களுக்குக் கோடற் பொருளும் வருவிக்கப்பட்டன.
இதனால், சிவானந்தத்தை நுகர்வார்க்கு ஐம்புல இன்பம் இன்பம் ஆகாது, உவர்ப்பேயாதல் கூறப்பட்டது.