ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

English Meaning:
Prowess of Redeemed State

The seas vast,
The mountain peaks high,
The denizens of the universe,
And those who hold their sway there,
The Primal Sakti,
And the people in directions eight
—All, all, came within my grasp;
Redeemed am I, high above all.
Tamil Meaning:
இம்மந்திரம் சிவனது அருளைப் பெற்றுச் சிவனைச் சார்ந்து நிற்கும் மோன சமாதியினர்க்கு உலகு அனைத்தும் தமது வியாபகத்துள்ளே அடங்கித் தோன்றுதலைச் சில வகைகளால் விளக்கிற்று.
Special Remark:
சுழி - சுழல், இதன்கண் தொகுக்கப்பட்ட துவ் விகுதியை, `சுழல் கொண்டது` என மாற்றி வைத்து உரைக்க. பல சுழல்களைக் கொண்டது கடல். குல வரை - உயர்ந்த மலை. இதனையும், உச்சிக் குலவரை` என மாற்றியுரைக்க. உச்சி - சிகரம், அண்டர் - வானுலகத் தவர். அவர்கட்குத்தலைவர் அண்டத்தலைவர் எண்டிசையோர், திசைக்காவலர், ஆதி - பிரமன். இவரைக் கூறியது உபலக்கணம் ஆதலின் எஞ்சியோரும் எஞ்சிய பொருள்களும் கொள்ளப்படும். சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையடைந்தார்க்கு உலகம் தம்முள் அடங்கித் தோன்றிதற்குச் சான்று, உபநிடங்களில் வாம தேவர் முதலிய முனிவர்கள். ``யானே மனுவாய் இருந்தேன், சூரியனாய் இருந்தேன்``9 என்றாற்போலக் கூறியதாக உள்ள வாக்கியங்களும் சருவஞ்ஞானத் தரத்தில், ``யானே எல்லாமாய் நின்றேனும், எல்லாவற்றையும் கடந்து நின்றேனும்`` என்பனபோல் உள்ள வாக்கியங்களுமாகும். `கொள்` என்பது அடியாகக் `கொண்டனர்` எனவும் `விள்` என்பது அடியாக `விண்டனர்` எனவும் வருதல்போல் `உள்` என்பது வினைப் பகுதியாகாது, பண்புப் பகுதியாகலானும் `மாண்` என்னும் பண்படியாக `மாண்டது` என வருதல்போல, `உள்` என்பது அடியாக ஓரிடத்தும் `உண்டது` என வாராமை யாலும் இஃதோர் அரிய ஆட்சி. `உளராயினர்` என்பது இதன் பொருள். உய்ந்தேன் - பிறவியினின்றும் தப்பினேன். `ஒழி` துணிவுப் பொருள் விகுதி. பின் அதுவும் சேர்ந்து பகுதியாயிற்று.
மோன சமாதி என்றது மீளப் பிறவாமையை, ``வீட்டையடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்; மேவாது தப்பினவர் ... ... ... இந்தப் பார்மேல் நாட்டிய நற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே``3 என்னும் சிவஞான சித்தியால் அறிக. [இதன்பின் பதிப்புக்களின் காணப்படும்`` தானே திசையொடு தேவருமாய் நிற்கும்`` என்னும் மந்திரம் இரண்டாம் தந்திரத்தில் `திதி` என்னும் அதிகாரத்தில் வந்தது.]