ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

English Meaning:
The Realized Souls Have No Possessions

Mala none; impurity none; pride and prejudice none;
Family none, excellences none; affluence none;
For them who in wisdom
Plant themselves in Nandi
—Firm in His love.
Tamil Meaning:
ஞானத்தைப் பெற்று` அதன் பயனாகச் சிவத்தில் புறம் போகாது, அன்பினால் தம்மை ஆழ்த்திவைத்திருப்பவர்கட்குப் புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோரடு ஒத்துத் தோன்றினும், உண்மையில் அவை இல்லையாம்.
Special Remark:
மலம், ஆணவம், அஃது இங்கு ஆகுபெயராய் `யான், எனது` என்னும் செருக்கினைக் குறித்தது. உலகத்தார்போல இவர்களும், `யான் செய்தேன்; பிறர் செய்தார்` என வழங்கற்பாடு பற்றிக் கூறினாராயினும் அவர் உணர்வு, `எல்லாம் சிவன் செய்தது` என்றே உணர்ந்திருக்கும். மாசு - குற்றம். அஃது அவர் செய்த பிறவியைத் தருதலின் குற்றமேயாதல் அறிக. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனையும், அப்பூதியடிகள் மகனையும் உயிர்பெற்றெழச் செய்தும், முதலை வாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டும் வணிக்கன்னி யொருத்தி, அப்பூதி யடிகளும், அவர்தம் துணைவியாரும், அந்தணப் பெற்றோரும் ஆகியோர்ககு யாதொரு கைம்மாறும் வேண்டாமல் பெருநலம் தந்து உதவிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகி. மூவர் முதலிகட்கும் அவற்றால் யாதொரு புண்ணியமும் விளையாமையையும், தாதையைத் தாள் அற வீசிய சண்டேசரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறிக. இவர்கட்குப் புண்ணியமும், பாவமும் விளைந்திருப்பின் இந்திராதி தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலும், பாதகன் சென்றடையும் நரகத்திலும் சென்றிருத்தல் வேண்டும். அவை அவர்க்கு இல்லாது போயினமை வெளிப்படை.
மானமாவது, தம்மைப் பிறர் இழிவு படுத்துதலைப் பொறுக்க மாட்டாமை, அப்பரைச் சமணர்கள்,
``தவ்வை சைவத்து நிற்றலின், தருமசேனரும் தாம் பொய்வகுத்ததோர் சூலைதீர்ந்திலதெனப் போயினார்``
என அரசனிடத்திற் கட்டிக் கூறி,
``தலைநெறியாகிய சமயந் தன்னைஅழித்து; உன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பின் நெறியழித்த பொறியிலி`` *
எனப் பலர்முன் இகழ்ந்தபோதும் வாளா இருந்ததை எண்ணுக.
அபிமானம் - பற்று. அஃதாவது, உடம்பும், தாய் தந்தையார், மனைவி, பிறர் ஆகிய சுற்றமும், பொன், பொருள், மக்கள், மாட மாளிகை, காணி முதலிய செல்வமும் ஆகியவற்றைத் துறக்க விரும் பாமல், அவை தாமே நீங்கும் நிலைமை எய்தியவழி உயிர் போவது போலக் கையற வெய்துதல். இந்நிலை நாயன்மாரிடத்து இல்லாமை தெளிவு.
குலம் இல்லாமை திருநீல நக்க நாயனார் திருநீல கண்டப் பாணருக்கு அவர் தம் துணைவியாரோடும் இரவுப் பொழுதைக் கழிக்க வேள்வி அறையை அளித்ததில் இனிது விளங்கிற்று.
``கொள்ளும் குணங்களும் இல்லை`` என்றதனால், `தள்ளும் குற்றங்களும் இல்லை` என்பது போந்தது. அவை, `நியமம்` என யோக உறுப்புக்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்படும் விதி முறைகள். குற்றங்கள், அவற்றிற்கு எதிரவாயுள்ள விலக்குமுறைகள். அவற்றை விலக்கியொழுகல், `இயமம்` எனப்படும். மோன சமாதியில் நிற்போர் உலகை மறந்திருத்தலால், `இவைகள் அவர்பால் கட்டாயமாக நிகழும்` என்பது இல்லை.
நலமாவது இன்பம். இதனானே தீங்கும் பெறப்பட்டது. `நலத்தில் விரும்பும், தீங்கில் வெறுப்பும் அவர்பால் நிகழா` என்பதாம். ``ஓடும்`` செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்`` என அருளிச் செய்தமை காண்க. ``நலத்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்``* என்றதனையும் நோக்குக.
`இவற்றையெல்லாம் இவர்கள் தாமே வலிந்து நீங்காது, உறங்கினோன் கையிலிருந்த பொருள் அவனையறியாது தானே வீழ்ந்துவிடுதல்போல, மோன சமாதியை அடைந்த இவர்களிடத்தி லிருந்து தாமே நீங்குவன` என்பதை,
``உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானால், புரியாது
ஒழித்திடில் நிரயத் தழுந்துதல் திடமே`` *
என்னும் சங்கற்ப நிராகரணத்தால் அறிக.
``ஞாலமதில் ஞான நிட்டை யுடையோ ருக்கு
நன்மையோடு தீமையிலை; நாடுவதொன் றில்லை;
சீலமிலை; தவமில்லை; விரதமொடாச் சிரமச்
செயலில்லை; தியானமிலை; சித்தமல மில்லை;
கோலமிலை; புலனில்லை; கரண மில்லை;
குணமில்லை; குறியில்லை; குலமுமில்லை;
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்
பாடலினோ டாடல்இவை பயின்றிடினும் பயில்வர்``9
என்ற சிவஞான சித்திக்கும் இதுவே கருத்தென்க.
ஞானத்தினாலே நந்தியைப் பலம் மன்னி அன்பில் பதித்து வைப்பார்க்கு` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. பலம் - பயன். `பலமாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சிவனை அனுபவமாக அணைந்தோர், தோற்றத்தில் உலகர்போலவே காணப்படினும் அவரது நிலை முற்றிலும் வேறாதல் கூறப்பட்டது. இத்தன்மை யுடையாரே `சீவன் முத்தர்` எனப்படுவர்.