ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

English Meaning:
Sweetness of Namasivaya Fruit

One the God for worlds all,
One is He, the life of worlds all,
Lovely indeed in Namasivaya Fruit,
Sweet it is to them
Who of it tasted.
Tamil Meaning:
`கடவுள்` என்பதும், `தெய்வம்` என்பதும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. தெய்வம் எழுவகைப் பிறப்புக்களில் ஒரு பிறப்பு வகையைச் சேர்ந்ததது. அது தமிழில் `புத்தேள், அணங்கு` முதலிய பெயர்களால் குறிக்கப்படும்` கடவுள் பிறப்பில்லாது, அனைத்தையும் கடந்த நிற்கும் தனிமுதற் பொருள். கடவும் ஒன்றே; தெய்வங்கள் பல. மக்கள் அவர்தம் மரபுபடியும் விருப்பப்படியும் வேறு வேறு தெய்வங்களை வழிபடுவர். கற்புடை மகளிர் யாவர்க்கும் தெய்வம் கணவனே. கணவன் ஒரு தெய்வத்தை வழிபடுவானாயின் அவனோடு இசைந்த நின்று மனைவியும் அத்தெய்வத்தை வழிபடுவாள் ஆயினும், மனைவிக்கத் தெய்வம் கணவன் தான். இதனையே திருவள்ளுவர் ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்`` எனக் கூறினார். ஆகவே, மகளிர் கணவன் தொழாத தெய்வத்தைத் தாம் விரும்பி வழிபடுதல் குற்றமே யல்லது, கடவுளை வழிபடுதல் குற்றம் அன்றாம். ஏனெனில், கடவுள் யாவராலும் தெழத்தக்கவர்.
`மனைவி தன் கணவனைத் தவிரத் தான் ஒரு தெய்வத்தை வழிபடுதல் குற்றம்` என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இந் நிலையில், `மனைவி கடவுளைத் தொழலாமா, தொழக்கூடாதா என்னும் வினா, சமண பௌத்த மதங்களில் இல்லை. ஏனெனில் அவை `கடவுள் உண்டு` எனக் கொள்ளவில்லை. கடவுளைக் கொள்ளாத அம்மதங்கள், `தெய்வங்கள் உள` என நம்புகின்றன். ஆகவே, `மனைவி கணவனைத் தவிரப் பிற தெய்வங்களைத் தொழ லாகாது` என மறுப்பதோடு அவை நின்றுவிடுகின்றன. `மனைவி கடவுளைத் தொழுதால் என்ன` என்று வினவினால், `அத்தொழுகை பயனற்ற செயல்` என்பது அம்மதங்களின் முடிவு. `கடவுள் உண்டு` எனக் கொள்கின்ற மதங்கள், `கடவுள் ஒன்றே` என்றும், `அஃது யாவராலும் தொழத் தக்கது` என்றுமே கூறும். தெய்வங்களும் கடவுள் அருளால் சில ஆற்றல்களைப் பெற்று விளங்குதலால் இவ் இடங்களில் `கடவுள்` என உபசரித்துக் கூறப்படும். கடவுள்பொது மக்களால் `தெய்வம்` என்றே` கருதி வழிபடப்பட்டு அவ்வழிபாட்டினை ஏற்று அவர்விருமிபிய பயனைத் தருதல் பற்றி, தெய்வம்` என உபசரித்துக் கூறப்படும். இம்மந்திரத்தில், ``உலகுக்கு ஒரு தெய்வம்` என்றமையால், கடவுளே `தெய்வம்` எனப்பட்டாமை தெளிவாம்.)
``ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்`` என்றது, `கடவுள் பல இல்லை`` ஒன்றே` என்பதைத் தெளிவித்தது. தெய்வங்களை யெல்லாம் `கடவுள்` எனக் கூறி, `அவற்றிடையே உயர்வு தாழ்வுகள் இல்லை` எனக் கொள்வோர், அநேகேசுர வாதிகள்` எனப்படுவர். `கடவுளே இல்லை` என்போர் நிரீச்சுரவாதிகள். அவருள் அநேகேசுர வாதிகள் கொள்கையை மறுத்ததே இதன் முதல் அடி.
அக்கடவுள் உலகுக்கு உயிர்`, அஃதாவது, `எல்லாப் பொருளிலும் எள்ளினுள் எண்ணெய்போல் நிறைந்து அவ்வப் பொருள்களின் தன்மை பயன்படச் செய்வது` என்பதாம். ஒன்றாய கடவுள். இவ்வாறு அனைத்துப் பொருள்களிலும் அது அதுவாய் நிற்றலையே மாணிக்க வாசகர்.
``ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க`` 8 என அருளிச் செய்தார்.
இந்நிலை `அந்தரியாமித்துவம்` எனப்படும்.
ஒன்றாய், உலகுக்கு உயிராய் உள்ள கடவுள் மந்திரம் `நமச் சிவாய` என்பதே உண்மை. அதன் உண்மைப்பொருளை உணர்ந்து பயில்கின்றவர்கள் கடவுள் இன்பம் கரையின்றி விளைதலைக் காண்பர். ஒரு பழத்தின் இனிமையை அதனைத் தின்று பார்த்தவர் அறிவாரேயன்றி, வாளா காண்பவர் அறியார். அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த இன்பத்தைக் கண்டேன். (பயிலாதவர் அதனை அறிதல் அரிது) ஆகையால், அம்மந்திரத்தை உருவகமாகக் கூறினால், `கிடைத்தற்கரிய தனி ஓர் இனியகனி` என்று கூறலாம்.
[இம்மந்திரம் முடிவான பொருளைக் கூறுதலாலும் அப் பொருளை உள்ளவாறுணர்தல் அரிதாய் இருத்தலாலும் உரை இங்ஙனம் விரித்தெழுதப்பட்டது.]
Special Remark:
`கண்டீர்` முன்றும் முன்னிலையசைகள். `நன்று` என்றது, `பிழையற்றது`; உண்மை என்றபடி `நமச்சிவாய` என்பது ஒரு மந்திரம் - என்பதும், `மந்திரங்கள் எல்லாம் தெய்வங்களைப் பொருளாக உடையன் என்பதும் தெளிவாகலின், `நமச்சிவாயப் பழம் நன்று` என்பது இப்பொருட்டாயிற்று. ``இன்மைச்சிவாய`` என்பதை இன்னகை` என்பது போலக் கொண்டு சந்தி பிரித்துக் காள்க. `நமச்சிவாய இன்பழம்` என மாற்றிக்கொள்.
இதனால், `சிவானந்தப் பேற்றை எய்தினோர் அது நீங்காமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமக்குரிய முறை யறிந்து ஓதியிருப்பர்` என்பது கூறப்பட்டது.