ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

English Meaning:
How They Hastened to the City of God

I freed myself of fetters
The Creator bound me with,
I learned the way of reaching Siva;
I smote Karmas with the sharp sword of mind,
I stood ego lost;
And now I hasten toward the City of God.
Tamil Meaning:
நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)
Special Remark:
``நிலை`` என்றது வழியை. கதி - புகலிடம்.
``தொல்லையில் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அழிந்து போமே``*
எனவும்
``ஏன்ற வினை உடலோ டேகும்;இடை யேறும்
தோன்றில், அருளே சுடும்``*
எனவும் கூறுபவ ஆகலான், ``மனம்`` என்று ஞானமேயாதல் அறிக. ``ஞான வாள் ஏந்தும்; ஐயர் நாதப் பறை அறைமின்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
``தண்டா யுதமும்,திரிசூ லமும் விழத்
தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில்
வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டா யடா அந்த காவந்து பார்சற்றென்
கைக்கெட்டவே,``
``பட்டிக் கடாவில் வரும் அந்த கா! உனைப்
பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய
சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெருமான்
திருமுன்பு நின்றேன்;
கட்டிப் புறப்படடா! சத்தி வாள் என்றன்
கையது வே``
என எவ்விடத்தும் ஞானமே வாளாக உருவகிக்கப்படுதலை அறிக. (``சத்தி`` என்பது சிலேடை வகையால், `சத்தி` என்னும் ஆயுதத்தையும், ஞானத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. சத்தி, முருகனது படைக்கலங்களுள் சிறந்த ஒன்றாதல் தெளிவு.)
புரம் - உடம்பு. முரிந்தேன் - முரிந்ததாகப் பெற்றேன்.
இதனால், மோன சமாதியை எய்தினவர்க்குப பிராரத்தமும் ஆகாமியமும் இலலையாதலும், அதனானே தனு கரண புவன போகங்களாகிய மாயையின் மயக்கம் நிகழாமையும் கூறப்பட்டன. இக்கருத்தினை நாயனார் முன் தந்திரத்தில்.
``தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்;
முன்னை வினையும் முடிச்சை அவிழ்ப்பர்கள்;
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே``
எனக் கூறியருளினார். சஞ்சித சுன்மம் குருவின் திருக்கண் நோக்கத்தால் எரிசேர்ந்த வித்தபுபோல அப்பொழுதே கெட்டொழிந்தது. சஞ்சித கன்மம் நீங்காத வரையில் ஞானம் பிறவாது. ஆகவே, ஞானியர்க்குச் சஞ்சித கன்மம் இல்லை.