ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

English Meaning:
Siva-Sakti-Jiva Union

Unless the Heavenly Father and Heavenly Mother love me,
How shall the worldly father and worldly mother know me?
The Father, Mother and I were together seated;
My Father and Mother, I adoring.
Tamil Meaning:
இவ்வுலகில் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், எல்லோராலும் அறியப்பட்ட அவ்விருவரும் `யான் பிறக்க வேண்டும்` என்று விரும்பித் தம்முட் கூடியதும், அதனால் யான் பிறந்ததும் உண்மை. ஆயினும் தங்களால் பிறந்த என்னை `யார்` என்று அவர்களில் ஒருவ ரேனும் அறிவாரோ? அறியார். அப்பால் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது முன்பு அவர்கள் என்னைக் காப்பாற்றியதுபோக அவர்களை யான் காப்பாற்றும் நிலை உண்டாயிற்று.
Special Remark:
`ஆகவே, அவர்கள் எப்பொழுதுமே என்னைக் காப்பவர் ஆவரோ? சிலகாலமே அன்னராவர். என்றுமே என்னைக் காக்கும் அன்னையும், அத்தனும் வேறுனர்` என்பது குறிப்பெச்சம். `அந்த அன்னையும், அத்தனும் யாவர்` என்னும் வினாவிற்கு விடையும் பின்னிரண்டடிகளில் குறிப்பாய் அமைய அவற்றை இரட்டுற மொழிந்தார்.
முத்தி பஞ்சாக்கரத்துள் வகாரம் அன்னை; சிகாரம் அத்தன்; யகாரம் யான்; மூவரும் உடன் இருப்பது முத்து பஞ்சாக்கரம். புரத்தல் - பேணுதல், அது முத்தி பஞ்சாக்கரத்தை அயராது கணித்து அதன் பொருளை உணர்த்திருத்தல். `இதனால் யான் மோன சமாதியில் நிலைத்துள்ளேன்` என்பது கருத்து.
அன்புற்றது, அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இரண்டாம் அடியில் ``அத்தனும்`` என்பதன்பின் `அவருள்` என்பது வருவிக்க. ஈற்றடியில், `அன்னையையும்` என உருபும், `அத்தனையும்` என உருபும் உம்மையும் விரிக்க.
இதனால், `உடம்பைப் பயந்த தாய் தந்தையார்க்கு மக்கள் கடமைப்பட்டவராயினும், உயிர்க்கு அறிவைப்பயந்து வரும் தாய் தந்தையாரை மறவாது போற்றுதல் அதனினும் பெரியதொரு கட்டுப்பாடு; அதனை மோன சமாதி அடைந்தோரே நிரம்பச் செய்வர்` என்பது கூறப்பட்டது.