ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

English Meaning:
Meek and Intense Prayer Leads to Siva

Him I adored, the Param, the Primal Lord,
Determined I stood, nothing else I seek;
In my body I held Him in union, the First One;
Meek in prayer I stood and I saw my Siva`s Being.
Tamil Meaning:
முதல்வகட்கெல்லாம் முதல்வனாய் முடிநிலை முதல்வனாயுள்ள சிவனையே நான் முதல்வனாகத் துணிந்தேன். அதனால் அவனையே நான் வணங்கினேன். இனி அவனை வணங்குதலைத் தவிர பிறிதொன்றையும் அவாவ மாட்டேன். அவனையே என்உள்ளத்தில் இருத்தினேன். அதனால், எனது முனைப்பு நீங்கப் பெற்றேன். அவனது உண்மை யியல்புகள் எல்லாம் எனக்கு அனுபவமாயின.
Special Remark:
மோன சமாதி வாய்க்கப் பெறும் வழியையும் அது வாய்க்கப் பெற்றாரது இயல்பையும் தம் அனுபவத்தின்மேல் இட்டுக் கூறியவாறு.
பரம் +அதிபதி =பரமாதிபதி; வடமொழித் தீர்க்க சந்தி அதிபதி - முதல்வன். ``பரமாதிபதியைத் துணிந்து நின்றேன்`` என்பதை முதலிற் கூட்டியும், `ஆதிப் பிரானை உடல் அணிந்து நின்றேன்` என மாற்றி வைத்தும் உரைக்க. அணிதல் - தரித்தல். உள்ளத்தை ``உடல்`` என நாயனார் குறித்தலை மேலேயும் கண்டோம்.* `உடலில்` என ஏழாவது விரிக்க. காண்டல், அனுபவமாக உணர்தல்.