ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

English Meaning:
How Siva Entered in Me

Siva with His Celestial retinue entered in me;
He severed my bonds that to births give rise;
He is my Father,
He the Primal Lord that in His service accepted me;
Into Grace my heart entered;
And there, imprisoned, remained.
Tamil Meaning:
சிவன் ஒருவனே எனக்குத் தந்தை; குருவாகி வந்து ஆட்கொள்ளும் முதற்கடவுள். அத்தகையோன் முன்பெல்லாம் எனக்கு அகப்படாதிருந்து, இப்பொழுது வந்து என் உள்ளத்திலே அகப்பட்டமை தேவர் கூட்டமும் உடன் வர அவன் பற்றி நின்ற பாசத்தை அரித்தமையாலேயாம்.
Special Remark:
பின்னிரண்டடிகளை முன் வைத்து உரைக்க. உரைக்கவே, முன்னின்ற ``அவன்`` என்னும் சுட்டுப் பெயர் `சிவன்` என்னும் சிறப்புப் பெயராயும் , `சிவன்` என்னும் சிறப்புப் பெயர், அவன் என்னும் சுட்டுப்பெயராயும் நிற்கும். இதனால் சிவன் நந்தி பெருமானாய் நின்று நாயனாரை ஆட்கொண்டதேயன்றி தன் இயற்கை வடிவிலும் காட்சியளித்து அருள்புரிந்தமை பெறப்படுகின்றது. ``ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை``l ஆதலின், `குருவாகி நின்று அருள் செய்தபின்பும் இவர்க்கு இவ்வாறு தோன்றி அருள்புரிவான் ஏன்` என்றும், `இங்ஙனமாயின் ஏனை யோர்க்கும் இவ்வாறு ஏன் அருள் புரிதல் கூடாது` என்றும் அவனை வினாவ நாம் யார்?
`சிவன், தேவர் உடன் கூட வந்து` என மாற்றியுரைக்க, `அகப் பட்ட ஆறு` என்பதில் அகப்பட்டதையே `ஆறு` எனக் கூறினமையின் பெயரெச்சம் தொழிற் பெயரொடு முடிந்ததாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பது போல, `இவன் வாழ்தல், அவனைச் சார்ந்து` என்பது போலத் தொழிற்பெயர் எழுவாய்கள் வினையெச்சப் பயனிலைகளைக் கொண்டு முடிதல் உள ஆகலின், `அகப்பட்ட ஆறு பாசம் அறுத்திட்டு` என முடிந்தது.
இதனால், இயைபு பற்றி நாயனார் தமது தனி அனுபவம் ஒன்றை அருளிச் செய்தார். இதனானே பிறர்க்கும் இது கூடலாம் என்பது உணர்தல் வேண்டி.