ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

English Meaning:
Their Thought-Free State

Brahma and Vishnu, of yore,
Our Lord created;
And There He remains ever,
None know why;
If renouncing all,
Jiva There appears,
And empties its thoughts,
No more birth in carnal body will be.
Tamil Meaning:
`படைப்புக்காலத்தில் எங்கள் கடவுளாகிய சிவன் அரியை முன்படைத்து, அவன் வழியாக அயனைத் தோற்றுவித்து, படைத்தல், காத்தல்களைச் செய்வித்த, அவர்கள் செயலைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான்` என்று வேதாகமங்கள் கூறுகின்றன. இஃது உண்மையாமாற்றை அறிய மாட்டாதவர் `அரி, அயன்` என்போருள் ஒருவனையே `முதல்வர்` என்றும், `அவர் உள்ளிட்ட பலர் முதல்வர்` என்றும் கூறிப் பிணங்குகின்றனர். தோற்றம் உடையவர்களாய்ச் சிவனின் வேறாகத் தோன்றிச் செயலாற்றுவோர், `நமது தோற்றமும், செயல்களும் சிவனது சங்கற்பத்தால் நிகழ்வன` என்பதை எண்ணாத வேறு நிலை உடையவர்களாய் இருப்பராயின், அவரது நிலைமை, ஒரு முப்பொருளில் ஒரு பகுதி துண்டாகிப் பிரிந்தவழி உளதாகும் பாழ் நிலையையே எய்தும்.
Special Remark:
`காணப்படுகின்ற இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்யும் கடவுளர், அதிகார மூர்தத்களேயன்றி, முதற்கடவுள் அல்லர்` என்பது கடவுட் கொள்கையுடைய வேத மதங்கள் அனைத்திற்கும் ஒத்த முடிவு. `இவர்கள் முதற்கடவுள் அல்லர்` எனவே, `உயிர் வகுக்கதினர்` என்பதும், `மூவகை உயிர்களையும் மும்மலங்களுள் முதல்மலமாகிய ஆணவ மலம் பற்றியே உள்ளது` என்பதும், ஆயினும் அது மிக வன்மையாகப் பற்றியுள்ள உயிர்கள் அது காரணமாக முக்குண வடிவான பிரகிருதி வயப்பட்டு, முதல்வனை உணராமல் மயங்குகின்றன, அதனால் அவை சகல வருக்கத்தின` என்பதும், ஏனை இருவகை உயிர்களையும் ஆணவ மலம் மெய்மையாகவும் மிக மென்மையாகவும் பற்றியிருத்தலால் அவை பிரகிருதி வயப்படாதும், அதனானே முதல்வனை மறவாதும் உள்ளன; அதனால், அவை சகல வருக்கத்தின` என்பதும் சித்தாந்தம். `அரி, அயன்` என்போர்களில் அரி இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து உண்டு வளர்ந்து இன்பத் துன்பங்களை மயங்கினமையும் புராண இதிகாசங்களில் பரக்கக் கேட்கப் படுதலால் அவனை, `சகல வருக்கத்தினன்` எனக் கொள்ளுதலே பொருந்தும். அவன் சகலரே யாதல் சொல்ல வேண்டா. சிவன் இவ்வுலகில் பிறந்தமை ஓரிடத்தும் சொல்லப்படாமையேயன்றி சிவன் பிறப்பிலி` என்பது பலவிடத்து பேசப்படுகின்றது. ஆகவே, அவன் உயிர் வருக்கத்தினன் ஆகாது முதற்கடவுள் ஆகின்றான். நடுவுநின்று ஆராய்வார் இவ்வுண்மையை நன்கு உணரவே செய்வர், ஆயினும் பலர் நடுவு நில்லாது மாறுபடப் பேசுதல் பற்றி, ``எங்கள் ஈசன் கண்டு அங்கு இருக்கும் கருத்து அரிவார் இல்லை` என்றார். கருத்து - உண்மை. ``எங்கள்`` எனத் தம்மோடு உளப்படுத்தியது, பிறப்பின்மையே முதற் கடவுட்கு அடையாளம்` என்பதையும், `சிவன் பிறப்பிலி` என்பதையும் உடன்படுகின்ற பலரையும்.
``மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்;
தென்றலர்தொத் துள்ளார் துணை``
-திருவருட்பயன் - 13.
என்றது காண்க.
`தன்பொருட் டில்லையாயினும் உயிர்கள் பொருட்டாக இப்பரகிருதி உலகத்தில் பிறப்பெடுத்தலும் கடவுளது இயல்பு` எனக் குறின், அது, `முன்னே கடவுளின் இயல்புகள் யாவை` என ஆராய்ந்து வரையறுத்துக்கொண்டு, பின்னே, இவ்வுலகில் சிலரை, `இவர் கடவுளா, உயிர் வருக்கத்தவரா` என ஆராய்ந்து வரையரை செய்யாது, முன்னே சிலரை, `கடவுள்` என முடிவு செய்துகொண்டு, பின்னே `அவரது இயல்பே கடவுளின் இயல்பு` என மாறிக் கூறுவதாக்ம். இது `தலைக்கு ஏற்ப அமைவது தலை` என்பது போலத் தலைகீழபா பாடமாய்விடும். அன்றியும், எவையோ சில காரணங்களால், `பிறத்தலும் கடவுட்கு இயல்பு` எனக் கூறினால், `பிறப்பு இல்லாமையே கடவுள் தன்மை` என்பது நிலையாத ஒன்றாகி, `பிறவாமை` இழிவுடையதாகியும் விடும். அதனால், `எது உயிர்? எது கடவுள்? என ஐயுறுவார்க்கு, அவைகளை அடையாளம் காட்டித் தெளிவுபடுத்தலும் இயலாது. இத்துணை இடர்ப் பாடுகளும் பிறப்புடையாரை, `கடவுள்` என நிறுவ முயல்வதால் உளவாவனவாம். அதனால், உலகில் உயர்ந்தோர் சிலரை. `இவர் தமது தூய தன்மையால் கடவுள் தன்மையை எய்திய பெரியோராவர்` எனக் கூறியமைதலே பொருந்துவது.
மும்மூர்த்திகளில் ஒருவனாகிய உருத்திரன், அம்மூவருள் ஒருவனாயினும் அவன் சிவனை மறந்து செருக்குற்றதாக வரலாறு இல்லை. அதனால், அவன் சகல வருக்கதினனாகச் சொல்லப் படுகின்றான்.
இருமலம் உடையவனர் பிரளயாகலர். ஒருமலம் உடையவர் விஞ்ஞானகலர். இவர்களிலும் அதிகார மூர்த்திகளாய் அமைப்பவர் உளர். அவருள் `உருத்திரர்` எனப்படுவோர் பிரளயாகலர் வருக்கத் தினர். `வித்தியேசுரர்` என்றும், `மந்திரேசுரர்` என்றும் சொல்லப்படுபவர் விஞ்ஞான கலர் வருக்கத்தினர். விஞ்ஞானகலருள் `அணு சதாசிவர்` என நிற்பாரும் உளர் இவ்வாறான அதிகாரமூர்த்திகள் பலர் உளராயினும் சைவ நூல்களுள் அயன், மால் இருவரை மட்டுமே பெரும்பான்மையாக எடுத்துக் கூறுதற்குக் காரணம் அவர்கள் சகல வருக்கத்தினராய் இருத்தலாலேயாம்.
சகல வருக்கத்து ஆன்மாக்களும் அவை செய்த சிவபுண்ணியக் குறைவு மிகுதிகளால், இங்குக் காட்டிய எந்த அதிகார மூர்த்திகளாகவும் ஆதல் கூடும்.
``விறைக்கம லத்தோன் மாலும்
ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி
புண்ணியம் நண்ண லாலே``9
``வித்தைகள், வித்தை யீசர்,
சதாசிவர் என்றி வர்க்கு,
வைத்திடும் பதங்கள், வன்னம்,
புவனங்கள், மந்தி ரங்கள்,
தத்துவம்,சரீரம், போகம்,
கரணங்கள் தாம்எ லாமும்
உய்த்திடும் வயிந்த வந்தான்
உபாதான மாகி நின்றே`` 3
என்பன சிவஞான சித்தி.
காண்டல் - உண்டாக்கல். `அங்கு இருந்ததோர் துண்டின் தூறு ஆண்` என்க. பின் வந்த ``அங்கு`` இரண்டும், பொதுப்படக் குறித்த ஓர் இடத்தில்` எனப் பொருள் தந்தன. `தூறு, பாழ்` என்பன ஒரு பொருட் சொற்கள் ஈற்றில் நின்ற ``அது`` மேற்போந்த வெறுமனம் ஆதலைச் சுட்டு வந்தது.
இதனால், முன் மந்திரத்தில், `என்னை மோன சமாதியில் வைத்தவன் சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரனேயன்றிப் பிறர் அல்லர்` எனக் கூறியது வலியுறுத்தி நிறுவப்பட்டது.