ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

English Meaning:
Siva Appears as a Tapasvin

``O! Siva, my Great Lord`` — thus I hailed Him;
And as a tapasvin the Holy Lord was before me;
He the Desired Lord, who accepted me in His service
Him I stood adoring, the Lord Eternal.
Tamil Meaning:
நான் சிவபெருமானைச் சிவபெருமானாகவே அறிந்து, அப்பெயரையே சொல்லி ``சிவனே, சிவனை என்று ஓலம் இட்டுத் துதிக்க. `அந்த மெய்த்தவத்திற்கும் தலைவனே நான்` என்பான் போல அப்பெருமான் என்முன்னே வந்து நின்றான். இவ்வாறுதன் பெயரைச் சொல்லுவாரிடத்தெல்லாம் உடனே தோன்றுகின்ற அப்பெருமானை, `யார், யார் எவ்வெப்பெயரால் அழைக்கின்றாரோ, அவர் முன்னெல்லாம் அவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் அருளாளன்` எனவும் அறிந்து நான் பணிபவனாயினேன்.
Special Remark:
சிவபெருமானை, `சிவபெருமான்` என்று சொல்பவ ரெல்லாம் அப்பெயரின் பொருளை உணர்ந்து சொல்லாமல், பொதுவாக ஓர் இடுகுறியாகவே நினைத்துச் சொல்கின்றனர். ஆயினும் அப்பெயர், `அமங்கலம்(பிறப்பிறப்பு) ஒருபோதும் இல்லாத நிறைந்த மங்கல குணத்தை யுடையவன்`3 எனவும், பேரின்பத்துக்குக் காரணன்` எனவும், `முற்றுணர்வினன்` எனவும், தூய தன்மையன்` எனவும் l பொருள் தருதலால் `அவ்வெல்லாத் தன்மைகளையுடையவனே அவன்` என உணர்ந்ததையே ``சிவபெருமான் என்று`` என்றார். இதில் `உணர்தல்` என்பது சொல்லெச்சம். தவம், `பொதுத் தவம்` என்றும், `மெய்த் தவம்` என்றும் இருவகைப்படும். பொதுத் தவம் பசு புண்ணியங்கள். மெய்த்தவம் சிவபுண்ணியம், இது சிவஞான போதத்துள், ``இறப்பில் தவம்`` எனப்பட்டது. இவற்றுள் இங்கு, ``தவம்`` என்றது மெய்த் தவத்தை. பின்மூன்று அடிகளிலும் சந்திப் பகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப் பட்டது. மூன்றாம் அடியில் அதனுடன், அகரத்தையடுத்து வந்த சந்திரவகர ஒற்றும் தொகுக்கப்பட்டது. ``அவ்வப்பெருமான்`` என்றது, அவரவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் பெருமான் என்றபடி இக்கருத்தே, ``யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்``3 எனக் கூறப்பட்டது. சிவனைச் சிறப்பாகக் குறிக்கும் மற்றைப் பெயர்களுள் `பவன்` என்னும் பெயர் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. `பவன்`` எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே``9 என அப்பரும் அருளிச் செய்தார். ``பவன்`` என்பதற்குப் பொருள், `நினைத்த இடத்தில் நினைத்த உடன் தோன்றுபவன்` என்பது ஆகலின், அப்பெயரையே சொல்லி அழைப்பவன்முன் அவன் எதிர்படுதல் உறுதி` என அப்பர் அருளிச்செய்தார். அந்தக் குறிப்பே இங்கு, சிவபெருமானைப் பணிந்து நின்றேன்`` என்பதில் அமைந்திருத்தலை உணர்க. ``நின்றேன்`` என்றது, `இனி நான் வேறொன்றை நினையேன்` என்றவாறுஎனவே இதுவே மோன சமாதியாதலை உணர்க.
இதனால், சிவபெருமானை உள்ளவாறுணர்ந்த அடையவரே மோன சமாதியில் நிற்பர்` என்பது கூறப்பட்டது.