ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை

பதிகங்கள்

Photo

என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.

English Meaning:
In the Presence of Siva

The Lord filled my thoughts,
His Feet I beseeched;
As I thus entered His Presence,
He ended my birth`s whirl;
—He the Lord that has Thoughts none;
My Fate He fragmented,
My bonds He sundered.
Tamil Meaning:
எனது நெஞ்சம் சிவனது இரண்டு திருவடிகளையே சார்ந்து, அவற்றையே நினைத்து, அவற்றையே துதித்தலால், எனது பிறவித்தொடர் முடிவடைந்து அற்றொழியும்; இது திண்ணம். இனித் தனக்கு மனம் முதலிய மாயா கருவிகள் ஒன்றும் இல்லாதவனாகிய அவன், இப்பிறப்பிலும் நான் முகந்து கொண்டு வந்த ஊழ்வினையை எனக்கு ஆகாதபடி பிரித்து, எனது உடலுக்கே ஆகும்படி செய் தமையால், எனக்கு இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தில் வாட்டமும் ஆகிய முரண்பட்ட நிலைமைகள் இல்லாதபடி அறவே நீக்கிவிட்டான்.
Special Remark:
முன்னம் செய்தல் - நினைத்தல். ஏத்த - ஏத்தலால். ஏத்துதல் வாயின் தொழிலாயினும் அது மனத்தின் வழி இயங்குதல் பற்றி நெஞ்சமே ஏத்துவதாகக் கூறினார். தலைவிதி - ஊழ்; பிராரத்தம். பின்னம் செய்தல் - வேறுபடுத்தல். உடம்பை `யான்` என மயங்குதலும். அதனைப்பற்றிய பொருள்களை `எனது` என மயங்கும் சிவனையே நினைப்பார்க்கு இல்லாமையால் உடலை வந்து பற்றுவ தாகிய ஊழ் அவரைப் பற்றுதலும், அதனால் அவர் மகிழ்ச்சியும், வாட்டமும் அடைதலும் இல்லையாம். இந்நிலையே, `ஞானியர்க்கும் அவர்தம் பிராரத்த வினை உடல் ஊழாய்க் கழியும்` என்று சொல்லப் படுகின்றது. எனவே, இதனால் அணைந்தோரது இத்தன்மைகள் கூறப்பட்டமை காண்க.
``என்னைப் பிணக்கறுத்தான்`` என்பதை, `யானையை அரட்டடக்கினான்` என்பது போலக் கொள்க.