ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.

English Meaning:
Seek Him Incessantly — He is Timeless Eternity

Unless they have adored Him through aeons and aeons
They will not have become the Jiva that is Karma devoid;
Hair on the sea, and Aya besides,
Seek Him through ages after ages;
Yet is He beyond reach;
He that shines atop of Time.
Tamil Meaning:
பாற்கடலில் பள்ளி கொள்பவனாகிய திருமாலும், மற்றும் பிரமனும் எத்துணையோ யுகங்கள் வாழ்பவராயினும் சிவபெருமான் அவர்கட்கு எட்டாதவனாகவே யிருக்கின்றான். அதனால், அளவற்ற பிறவிகளில் அளவற்ற யுகங்களில் சிவனைப் பொது நீக்கியுணர்ந்து வழிபடுபவர்கட்கல்லது ஏனையோர்க்கு அவரது வினை அவனை அடைய ஒட்டாது.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. யாதொரு பிறப்பும் நிலையாததே ஆகையால், `ஊழிதோறும் உணர்தல் வேறு வேறு பிறப்பை எடுத்து` என்பது வெளிப்படை. உணர்தற்குச் செயப்படு பொருளாகிய `சிவனை` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனால், ``உணர்தல்`` என்றது சிவனை உணர்தலேயாகையால், பொது நீக்கி உணர்தலாயிற்று. ``உணர்வும்`` என்ற உம்மையால் பின்னின்ற உணர்தல், உணர்ந்து அடைதலைக் குறித்தது.
``பல்லூழி காலம் பயன்றரனை அற்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இவ்வுயிர் - இவ்வுலகத்துயிர்.
இதனால், `சிவனை உரை அடைதல் சிவஞானிகட்கே கூடும்` என்பதும், `சிவஞானம் சிவபூசையாலன்றி வாராது` என்பதும் முடித்துக் கூறப்பட்டன.