ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

English Meaning:
Break the Banks of the Sea of Sorrow

Breaking the marshy banks of the sea of sorrow
They adore Him with buds and blossoms;
They who know this not, into error great fall;
But those who know it, will see the Lord
In the crown of their head, seated within.
Tamil Meaning:
`தம் பிறவியை கழிக்கின்றார்கள்` எனக் கூறப் படும் பழியைப் பொருட்படுத்தாது அதனுள் அகப்பட்டு நிற்கின்ற உலகர் பலரும், கழி பொருந்திய கடலின் ஆரவாரம் போலும் உலகியல் ஆரவாரங்களை ஒழித்துச் சிவனை வழிபடுகின்றவர்கள் இட்ட பூக்களும், போதுகளும் நிரம்பக் கிடத்தைப் பலகால் கண்டா ராயினும் அவை விளைக்கும் பயனை அறியமாட்டார்கள். ஆயினும், அப்பழி நீங்க அவரது கூட்டத்தினின்றும் வேறுபட்டு நின்று வழிபடுவோரைத்தான் சிவன் தனது திருவருள் வியாபகத்துள் வைத்துப் பாதுக்காக்கின்றான்.
Special Remark:
`கடற் கௌவைபோலும் கௌவை` என்க. கௌவை - ஆரவாரம் உடைத்தல் - அழித்தல். வழிபடுவார்` என்பது எதுகை நோக்கி விரித்தல் பெற்றது `வழிபடுவார்` என்புழி, `சிவனை` என்பதும், ``மேவி நின்றான்`` என்புழி, `சிவன்` என்பதும் அதிகாரத்தால் வந்தன. வழிபடுவாரது மலரும் மொட்டும்` என ஆறன் உருபும், எண்ணும்மையும் விரித்துக் கொள்க பலரும் அறியார்கள்` என்க. இனி, `பலரும் அறியார்களாய்ப் பழிப்படுவார்` என முடிப்பினும் ஆம். வெளிப்படுதல் - விட்டு நீங்குதல் - தனது திருவடி வியாபகத்துள் அடக்குதலே `உச்சி மேவுதல்` எனப்படுகின்றது.
இதனால், சிவபூசை செய்வாரது உயர்வு, செய்யாதாரது இழிவும் ஒருங்கு கூறப்பட்டன.