ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

English Meaning:
Seek Him In Prayer

``My Lord, the Primal One, the Timeless Eternity, The Holy One,``
–Thus they adore Him with flowers diverse,
And in love endearing at His Feet worship,
His Grace to receive;
How then do you in prayer seek Him not?

Tamil Meaning:
சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.
Special Remark:
பின்னர், ``யாரும் உணரார்`` என்றதனால், முன்னர் ஏத்துதல் முதலியவற்றைச் செய்பவர் உணர்வோராதல் பெறப்பட்டது. ஆர்த்தல் - பிணித்தல். ``அருட் சேவடி`` என்பதன் பின் `கீழ்` என்னும் பொருள்பட வந்த கண்ணுரு இறுதிக்கண் தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு பட்டு என்றபடி. துதித்தல் நிலை பெற்றிருத்தல்; என்றது, ஆட்படாது தனிநிற்றலைக் குறித்தது.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான்`` 3
என்று அருளிச் செய்தமை காண்க.
இதனால், `சிவனை இலிங்கத் திருமேனியில் மலர்தூவி வழிபடாதார் காணமாட்டார்` என்பது கூறப்பட்டது.