ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி
நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன
நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.

English Meaning:
God is Immanent and Transcendent

One Being is He, immanent in all life
Indestructible He is;
In them He is; but He is not they;
He indwells them as Friend Divine
This His play, He of my heart`s desire.
Tamil Meaning:
எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.
Special Remark:
``தானே படைத்திடும்`` என மேல் வந்த மந்திரத்தில் ``வியாபி`` என்ற நிலையில் சுத்தி, ``சத்தி`` என்றே பொதுவாகச் சொல்லப் படும் அது படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் பொழுது ஆரணி, செனனி, இரோதயத்திரி - முதலியனவாகச் சொல்லப்படும். அவற்றுள் ``உயிர்க்குயிராய் நிலைதுன்றி`` என்றதனால், `சத்தி` என்னும் பொதுநிலையையும் ``துணை என்ன நின்றது`` என்றதனால் ஆரணி முதலாக நிற்கும், சிறப்பு நிலையையும் கூறினார். முதல்வன் செய்யும் தொழில்களை `விளையாட்டு` எனக் கூறுதற்குப் பொருள் `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு விளை யாட்டு` என்பது போல, `வருத்த மின்றி எளிதில் செய்தல்` என்பதே யன்றி, `சிறியார் விளையாடும் விளையாட்டுப் போலக் குறிக்கோள் யாதும் இல்லது` என்பதன்று.
``முதற்பொருள், முதலில் ஒன்றாய் இருந்தது; பின்பு அஃது யான் பலவாக ஆவேனாக எனக் கருதியது`` எனவரும் உபநிடதப் பொருளும் திருவருளைப் பற்றியதேயாதலை இங்கு இவற்றால் உணர்த்தியவாறு. இனி முதல்வன் செயலை `விளையாட்டு` எனச் சில இடங்களில் கூறப்படுதலையும் இங்குக் குறித்தார் என்க.
அன்பே சிவமாதல் பற்றி அதனை, ``என்னுள் நேயம்`` என்றார். `என்னுள் நேயம்தான் உலப்பிலியாகி நின்றது; உயிர்க் குயிராய் நிலைதுன்றி, அவை யல்லதாகும்` எனவும், `விளையாட்டுத் துணை என்ன நின்றதுதான்` எனவும் இருதொடராக இயைத்து முடிக்க. சடமாயும், பலவாயும் உள்ள பொருள்கள் யாவும் அழிவன ஆதலின் அத்தன்மைக்கு முழுதும் வேறுபட்டதென்றற்கு, `ஒன்று அதுவாலே` என்றார் ஆகலின், அஃது அறிவாய் நிற்றலும், உடன் கொள்ளப் பட்டது. `அதனாலே` என ஓதற்பாலதனை, ``அதுவாலே`` என ஓதினார்; `ஒன்றாய் நிற்கும் அத்தன்மையினாலே` என்க.
`முதற்பொருள் இவ்வாறெல்லாம் சிறந்து நிற்றற்குக் காரணம் திருவருளாகிய அத்தன்மையினாலே` என்பது உணர்த்தியவாறு.