ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில்
நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.

English Meaning:
Grace Grants Mukti and Beyond

It was His grace that led me into Pasa
It was His Grace that freed me from that Pasa
It was His Grace that in divine love granted Mukti
It was His Grace that granted me the love
For the State beyond Mukti.
Tamil Meaning:
என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதனகரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம் மெய்ப்பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.
Special Remark:
`அதற்கு யான் செய்யும் கைம்மாறு யாதுளது` என்பது குறிப்பெச்சம். அதனைப் புலப்படுத்தற்கே மேற்போந்தவற்றை மீள அனுவதித்தார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். `விடுவித்தது` என்பதில் விவ்விகுதி தொகுத்தலாயிற்று. கூச, முதனிலைத் தொழிற் பெயர். ``முத்தி`` என்பதன்பின், `கூட்டுவித்தது` என்பது சொல் லெச்சமாய் எஞ்சிநின்றது. நேசம் - அன்பு. அன்பினால் விளை வதாகிய இன்பத்தை `அன்பு` என உபசரித்துக் கூறினார். `நேசத்துக் கண்` என ஏழாவது விரிக்க. இன்பத்திற் சேர்த்தது அருளேயாயினும் அது புலப்படினும் அனுபவம் நிகழாமைபற்றி அது தோன்றாது மறைந்து நின்றது என்க. அருள்நிலை துரியமேயாக, ஆனந்த நிலை துரியாதீதம் ஆதல் அறிக.
இதனால், திருவருள் பெற்றார் அத்திருவருளின் நன்றியை உணருமாறு கூறப்பட்டது.