ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

English Meaning:
Lord is of Infinite Grace

Of infinite Grace is the Lord
Who my birth`s bonds sundered;
Of the holiest of holy is Nandi
He is the Dharmic sea;
The Pure One;
The Primal Lord
In amity my heart entered.
Tamil Meaning:
சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.
Special Remark:
`எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. ``நந்தி``, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.
``மாதவன்`` என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.
``இறைவனாவான் அறவாழி அந்தணன்`` 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் - மேலே உள்ளவன்; அபரன் - கீழே உள்ளவன்.
இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயஹ்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.