ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

English Meaning:
All Phenomena are manifestations of Grace

All manifestations of Nature are His Grace
All animate and inanimate are His Pure Grace
As darkness, as light, the Lord`s Grace pervades,
All, all are but the Grace of His Form manifest.
Tamil Meaning:
ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரியமாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தான் அவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.
Special Remark:
`அங்ஙனம் ஆனபொழுது சிவனை வழிபட்டுப் பயன் பெறுதல் என்பது திருவருள் இன்றி எங்ஙனம் இயலும்` என்பது குறிப்பெச்சம். இக்குறிப்புப் பொருளை உணர்த்துதற் பொருட்டே இம்மந்திரத்திற் போந்த அனைத்தையும் அனுவதித்துக் கூறினார்.
இருள் - அஞ்ஞானம்; அதன் காரணம் மலம். வெளி - ஒளி; மெய்ஞ் ஞானம். `ஈசன், எங்கும் மலமே, இருளே, வெளியே எனும்` என மாற்றி, ``சகளத்தன்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. இத் தொடரில் உள்ள ஏகாரங்கள் எண்ணிடைச் சொல். எனும் - என நிற்கும். சகளம் - உருவத்திருமேனி. ``இன்று`` என்னும் பயனிலைக்கு `ஒன்றும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
முதல் அடியிலும், `பவுதிகமாய சகலமும் அருளே` என மாற்றிக்கொள்க. சகலத்திற்குக் காரணமாவனவற்றை, ``சகலம்`` என்றார். சகல நிலையில் வலுப்பெற்று நிற்பன பூதகாரியங்களே யாதலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். `சகளத்தன்` என்றது அந்நிலைமையை. நிட்களம், நிட்கள சகளம் ஆகியவையும் இங்கும் பொதுப்பட, ``சகளம்`` எனப்பட்டன.
இதனால் திருவருள் இன்றி ஒன்றும் இயலாமை வலியுறுத்தப்பட்டது,