ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

English Meaning:
Grace is All

They know not the measure of Grace
That is pervasive all;
They know not the ambrosial sweetness
That from Grace flows;
They think not of the Five Acts
That Grace subtle performs;
Who knows how all-pervasive is Grace, indeed!

Tamil Meaning:
திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.
Special Remark:
`பெற்றார், பெறாதார்` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தின. `இவ்வுண்மையை யாமும் இப்பொழுதுதான் அறிந்தோம்` என்பது குறிப்பு. `நுகர` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அமுதானத்திற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. அடிநிலையை, ``அதிசூக்கம்`` என்றார்.
இதனால், திருருட் பேற்றின் பின் அதனது இயல்பு விளங்குமாறெல்லாம் கூறப்பட்டன.