ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

English Meaning:
Truth is Indivisible

Darkness (ignorance) and Light (knowledge)
Are the states two;
Life and body are the forms two;
Dharma and penance are the graces two;
Truth is but the blessing within.
Tamil Meaning:
`நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இரு நிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந் நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.
Special Remark:
``இருபதமாவது`` என்னும் பயனிலைக்கு `நள், என்னும் எழுவாய் தோன்றாது நின்றது. ``இரவும் பகலும்`` என்பதனைப் பயனிலையாக்கின் `இருபதமாவன` என்பது பாடமாதல் வேண்டும். ``ஆவது`` என்பது முன், பின் இரண்டிடத்தும் இயையாது.
``அது`` நான்கும் பகுதிப் பொருள் விகுதிகள். காட்சிப் பொருளாதல் பற்றிப் பிறப்பை ``உரு`` என்றார். முதல் இரண்டு அடிகளும் எடுத்துக் காட்டுவமையாய் நின்றன.
அருட்கு அடையாளமாவதனை, `அருள்` என்று உபசரித்தார். துறவறமே சிறப்புடை அறமாதல் பற்றி ``அந்தணர் என்போர் அறவோர்``l எனத் துறவறத்தோரே ``அறவோர்`` எனப்பட்டாற் போலத் துறவறத்தையே நாயனார் இங்கு `அறம்` என்றார். அஃதாவது, `உயிர்ச் சார்பு, பொருட் சார்பு` என்பவற்றுள் யாதொன்றின் மேலும் பற்றுச் செய்யாமை. தவமாவன சரியை கிரியா யோகம் இவை பலவும் நிகழ் தலை `நிகழ்ச்சி` என ஒன்றாய் அடக்கி, ``அருளதுவாவது`` என்றார். பயன் ``பொருள்`` எனப்பட்டது. `சத்திநிபாதம் வரப்பெற்றோரது நிலை இவ்வாறாம்` என்பது கூறமுகத்தானே அது பெற்றோரும், பெறாதோரும் தம் தம் நிலையை உணர்ந்து மகிழ்ச்சியும் வருத்தமும் கொண்டு. மேல் செய்யத்தக்கதின் முயலுமாறு கூறப்பட்டதாம்.